பொன்விழாவில் போட்ட யார்க்கர்! கொங்கு கோட்டையில் விழுந்த ‘விக்கெட்’! ஓபிஎஸ்க்கு கிடைக்குமா கோப்பை?
சென்னை : அதிமுக ஓபிஎஸ் அணி ஆலோசகராக பண்ருட்டி ராமசந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவி வருவது அதிகரித்துள்ள நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் இருந்தே 'மாஜி' ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்திருக்கிறார். குறிப்பாக திமுக கவுன்சிலர்களும் அவரோடு இணைந்திருக்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக உடைந்த பிறகு சசிகலா டிடிவி தினகரனை ஓரம் கட்டி விட்டு ஓபிஎஸ் உடன் கைகோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அப்போதிருந்தே இலைமறை காயாகவே மோதல் நீடித்து வந்தது.
இந்நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதலால் மீண்டும் இரு அணிகளாக பிளவுபட்டிருக்கும் நிலையில், மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து ஓபிஎஸ்க்கு ஆதரவு அளிக்கும் நிர்வாகிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஓபிஎஸ் ஆதரவு
கடந்த சில நாட்களாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தரும் சீனியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல கட்சிகளில் பயணித்து மீண்டும் அதிமுகவுக்கே வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அவரைக் கட்சியின் ஆலோசகராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்க, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாத பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி
பொதுக்குழு வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வந்த முன்னாள் எம்பியும், அதிமுக சீனியருமான மைத்ரேயன் , தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க நபரும் முன்னாள் எம்பியுமான முத்து கருப்பன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்றும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. ஓபிஎஸ் அணியில் இருந்திருக்கிறார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், ஒரு முறை திமுகவிலும், மற்றொரு முறை அதிமுக எம்எல்ஏவாக இருந்த சந்திரசேகரன் தான் ஆதரவளித்திருக்கும் நபர். இவரோடு சுமார் 200 பேர் ஓபிஎஸ்க்கு ஆதரவளித்துள்ளனர்.

சந்திரசேகரன்
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அப்போதைய அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான தங்கமணிக்கும் சந்திரசேகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிமுகவில் இருந்து போட்டி வேட்பாளராக சுயேட்சையாக களமிறங்கி தோல்விடைந்தார். இதனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர் சிறிது காலம் அமைதியாக இருந்த நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

கவுன்சிலர்கள்
குறிப்பாக இவரோடு மாவட்ட ஊராட்சி குழு ஒன்பதாவது வார்டு திமுக கவுன்சிலர் சிவப்பிரகாசம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதேஸ்வரி அண்ணாதுரை, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கெங்கம்மாள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் தனுஷ்கோடி, லட்சுமி, பாலுசாமி உள்ளிட்டோறும் அவரை சந்தித்திருக்கின்றனர். மேலும் பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்களும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே திமுகவிலில் இருந்த நிலையில் மீண்டும் திமுகவில் தான் சேர்வார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications