அதிரவைத்த மாபெரும் வரலாறு- இந்தி ஆதிக்க எதிர்ப்பு போர் மாவீரர்கள் தினம் ஜனவரி 25!
சென்னை: இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக நடராசன் தாளமுத்து தொடங்கி இன்றளவும் எண்ணற்ற தமிழர்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். தேக்குமர தேகங்களை தீ நாக்குகள் தின்னக் கொடுத்தவர்கள், துப்பாக்கித் தோட்டாக்கள் பாயும் என்றே தெரிந்தே நெஞ்சை நிமிர்த்திய மான மறவர்களை நினைவுகூரும் மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று ஜனவரி 25.
1930களின் தொடக்கத்தில் இருந்தே இந்தி திணிப்பு முயற்சிகள் அன்றைய சென்னை மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தமிழாய்ந்த தமிழறிஞர்கள் மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விசுவநாதம் என பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன.
1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ல் 125 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் என அரசாணையை வெளியிட்டார் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. இதுதான் முதலாவது இந்தி எதிர்ப்பு போர் வெடிக்கவும் அடிப்படையாக அமைந்தது. ராஜாஜியின் உத்தரவால் தமிழகமே கொந்தளித்தது. இப்போராட்டத்தில் பெண்களும் சமளவில் பங்கேற்று சிறைக்கு சென்றனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் என எண்ணற்ற பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்திக்கு எதிரான மகளிர் மாநாடுகள் நடத்தப்பட்டன.
இந்த யுத்த களத்தில்தான் சிறையிலேயே தாளமுத்து, நடராசன் என்கிற போராளிகள் மாண்டு போயினர். தாய்மொழி காக்க தன்னுயிரையே ஈந்த முதலாவது மொழிப்போர் மறவர்கள் இவர்கள்தான்.
திருச்சியில் இருந்து 1938-ம் ஆண்டு 100க்கும் அதிகமானாரோர் தமிழர் பெரும்படை என்ற பெயரில் நகரதூதன் இதழாசிரியர் மணவை ரெ. திருமலைசாமி தலைமையில் சென்னையை நோக்கி இந்தி திணிப்புக்கு எதிரான பிரசாரமாக நடைபயணம் மேற்கொண்டனர். மொத்தம் 42 நாட்கள் நடைபயணமாக 234 ஊர்கள் வழியாக சென்னையை இந்த தமிழர் பெரும் படை வந்தடைந்தது.
இந்த தமிழர் பெரும்படையில் பங்கேற்ற சிலர் நோயால் வழியிலேயே மாண்டு போயினர். காட்டாறுகளை கடந்துதான் இந்த பெரும்படை சென்னைக்கு நோக்கி பயணித்தது. அப்போது சென்னையில் தமிழர் பெரும்படைக்கு ஆதரவாக மீனாம்பாள் சிவராஜ் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னைக்குள் நுழைந்த தமிழர் பெரும்படையை மறைமலை அடிகளார் வரவேற்றார். இப்பெரும்படையின் பயணத்தின் முடிவாக சென்னை மெரினா கடற்கரையில் பிர்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த பொதுக்கூட்டத்தில்தான் தந்தை பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்கிற தனித்தமிழ்நாடு முழக்கத்தை எழுப்பினார். இதையடுத்து பெரும் யுத்தமாகவே மாறிப் போனது இந்தி எதிர்ப்பு போராட்டங்கள். இதனால் இந்தியை திணிக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. இதுதான் தமிழர்கள் தொடுத்த முதலாவது தாய்மொழிக்கான யுத்தம்!
இதன் பின்னர் அடுத்தடுத்து இந்தி ஆதிக்க எதிர்ப்பு அறவழி யுத்தங்களை தமிழகம் முன்னெடுத்தது. இதன் உச்சமாக நிகழ்ந்ததுதான் 1963, 1964, 1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போர். தமிழர் நிலத்தின் வரலாற்றையை தலைகீழாக்கிய மாபெரும் சமர் அது. 1965-ம் ஆண்டின் ஜனவரி 26 குடியரசு தினம் முதல் இந்திய யூனியனின் அலுவல் மொழியாக இந்தியே இருக்கும் என்ற சட்டம் நிறைவேற்றப்பட இருந்தது. இதற்கு எதிராக 1963 முதல் தமிழகம் யுத்தம் கொடுத்தது.
1963 ஜனவரி 25-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தி திணிப்புக்கு எதிராக 1964 ஜனவரி 25-; கீழ்ப்பளுவூர் சின்னசாமி தீக்குளித்து மாண்டார். அதனால்தான் ஆண்டுதோறும் ஜனவரி 25 மொழிப்போர் ஈகியர்- தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரில் மாண்டு போன தமிழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர்.. துப்பாக்கிக் குண்டுகளுக்கு மார்பை திறந்து காட்டி மரணத்தைத் தழுவிய மாவீரர்கள் ஏராளம்.. இவர்களில் பெரும்பாலானோர் வரலாற்றின் பக்கங்கள் இடம்பெறாமலேயே போயிருக்கின்றனர். தமிழக அரசியலில் திராவிடர் இயக்கப் பெருந்தலைவர்களாக உருவெடுத்த பலருமே 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரின் தளகர்த்தர்களா- தளபதிகளாக திகழந்தவர்கள். இந்த மாபெரும் யுத்தி ஆதிக்க எதிர்ப்பு யுத்தம் 1965 மார்ச் மாதம் மத்திய அரசு பின்வாங்கிய நிலையில் ஓய்ந்தது. ஆனாலும் சுமார் ஒரு நூற்றாண்டுகாலமாக இந்தியை திணிக்க ஆதிக்க சக்திகள் முயல்வதும் தமிழ்நாடு அதை எதிர்ப்பதுமான அறவழிச் சமர் தொடருகிறது... இந்தி தெரியாது போடா என்கிற இன்றைய முழக்கம் வரை!
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!