535 கோடியுடன் தாம்பரத்தில் "நின்ற" லாரி.. விரைந்த போலீஸ் படை.. பெரும் பரபரப்பு!
சென்னை : சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 2 கன்டெய்னர் லாரிகளில், விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு ரூ.535 கோடி பணம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வாகனத்தில் இருந்து புகை வந்ததால், நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ரூ. 535 கோடி பணம் கொண்டு சென்ற லாரி திடீரென நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து பல்வேறு வங்கிகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படும். அந்தவகையில், இன்று சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 2 வாகனங்கள் 535 கோடி பணத்துடன் விழுப்புரம் வங்கிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தன.

தாம்பரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற ஒரு வாகனத்தின் அடிப்பகுதியில் இருந்து திடீரென புகை எழுந்துள்ளது. இதையடுத்து, வாகனம் பழுதானது கவனிக்கப்பட்டு, சித்த மருத்துவமனை எதிரே நிறுத்தப்பட்டது. உடனே இதுகுறித்து தாம்பரம் போலீசாருக்கும், தாம்பரம் உதவி ஆணையருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த அவசர தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வாகனம் பழுதான இடத்துக்குச் சென்றனர். பழுது நீக்கும் பொறியாளர்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். வாகனத்தை இழுவை வண்டி மூலம் அங்கிருந்து எடுத்து சித்தா மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் வாகனம் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ. 535 கோடி பணத்துடன் சென்ற வாகனம் நடு வழியில் நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத்தை சரி செய்த பிறகு தொடர்ந்து, பணம் விழுப்புரத்துக்கு கொண்டு செல்லப்படுமா அல்லது மீண்டும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்படுமா என்பது பற்றி மேலிட உத்தரவுக்குப் பிறகு தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications