இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! வெளுத்து வாங்கப் போகும் கனமழை! எங்கெங்கே தெரியுமா மக்களே!
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் பல மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டியது. 21ஆம் தேதி முதல் படிபடியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் அது போலவே மழை குறைந்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை குறைந்தது. சில மாவட்டங்களில் வழக்கமான மழை கூட பெய்யவில்லை.
மாறும் வானிலை.. நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டப்போகும் மழை..மீனவர்களுக்கு வார்னிங்
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இந்நிலையில்," தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னர், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 8-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நெருங்கும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழைக்கு வாய்ப்பு
நாளை முதல் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தின் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்பதால் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயலாக மாறுமா?
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வடதமிழகத்தை நோக்கி வர கூடும் என்பதால் அடுத்த வார இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது எனவும் எட்டாம் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்யும். இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி புயலாக மாறுமா அல்லது தாழ்வு மண்டலமாகவே கனமழை தருமா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.