“எனக்கு மறுவாழ்வு கொடுத்தவர் உதய் அண்ணா” - மாற்றுத்திறனாளி மகிழ்ச்சி
சென்னை: உதவி கேட்டு வந்தவருக்கு உடனடியாக வேலை போட்டுக் கொடுத்துள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளி செல்வி பாப்பாத்தி. குடும்ப வறுமை தாங்காமல், தனக்கு அரசு ஏதேனும் உதவ வேண்டும் என்று ஒருநாள் உதயநிதியைச் சந்திக்கக் கோட்டைக்கு வந்திருக்கிறார்.

இவர் ஒரு விளையாட்டு வீராங்கனை. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல போட்டிகளில் பங்கேற்றவர்.
எதற்கும் அரசின் கதவைத் தட்டிப்பார்ப்போம் என வந்தவருக்குக் கட்டித் தங்கமாக அரசு அலுவலகத்தில் ஒரு தற்காலிக வேலை கிடைத்திருக்கிறது.
என்ன நினைக்கிறார் பாப்பாத்தி? அவரிடம் பேசினோம். "உண்மையா சொல்கிறேன் சார். உடனடியாக வேலை கிடைக்கும் நான் நினைக்கவே இல்லை. உதய் அண்ணா மூலமாக என் கவலைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது. எனக்கு மறுவாழ்வே கொடுத்திருக்கிறார் அவர்" என்கிறார் பாப்பாத்தி.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெரம்பலூர் பக்கம் உள்ள சின்ன கிராமம். அப்பா சின்னசாமி ஊரில் விவசாயம் பார்க்கிறார். அம்மா,செந்தமிழ்ச் செல்வியும். விவசாயம்தான் பார்க்கிறார். வசதி இல்லாத குடும்பம்தான்.
என் பெற்றோர்கள் பெரிய அளவில் பொருளாதார பலம் இல்லாதவர்கள். எனக்கு. 2 அக்காக்கள். 1 தங்கை. இருக்கிறார்கள்.
வருமானம் இல்லாமல் வருமையில் தவித்து வருகிறோம். எனக்குப் பார்வை இல்லை. ஆகவே, எல்லோரையும் போல இயல்பாக வேலை செய்ய முடியாது.
அதைப் புரிந்து கொண்டதாலேயே சின்ன வயதிலிருந்து கல்விதான் நம்மைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் விடாமல் படித்தேன்.
எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி. வேறு யாரும் அதிகம் படிக்கவில்லை. குடும்ப வறுமையால் அதிகம் படிக்கவைக்க முடியவில்லை. எனக்குச் சிறுவயது முதலே விளையாட்டில் அதிக ஆர்வம். நேஷனல் மற்றும் இண்டர்நேஷனல் அளவில் பதக்கங்களை வென்றுள்ளேன்.
அதிகம் செய்திகள் கேட்பேன். அதன் மூலமாக விளையாட்டுத் துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கிறார் என அறிந்தேன். ஆகவே அவரிடம் கோரிக்கை வைக்கலாம் என முடிவு செய்தேன். பலரையும் அணுகி சந்திக்க முடியுமா? எனக் கேட்டேன். எனக்கு அவரை எங்குப் பார்ப்பது? எங்கே அவரது அலுவலகம் உள்ளது? என்ற எந்த விவரங்களும் தெரியாது.
அப்போதுதான் ஊரில் உள்ளவர்கள் தலைமைச் செயலகத்திற்குச் சென்றால், அவரைக் கட்டாயம் பார்க்கலாம் என யோசனை சொன்னார்கள். அதன்மூலம் நானே வந்து பார்க்கலாம் எனத் திட்டமிட்டேன். ஒருநாள் நேராகக் கிளம்பி சென்னைக்குச் சென்று அண்ணன் உதயநிதியைச் சந்தித்தேன்.
நான் எதிர்பார்த்ததைவிட மிக எளிமையாக இருந்தது அவரை சந்திப்பது. மிக அக்கறையோடு அங்கே அலுவலகத்திலிருந்தவர்கள் எனது கோரிக்கையைக் கேட்டனர். அன்றே அமைச்சர் உதய் அண்ணாவைப் பார்க்கவைத்தார்கள். அவரும் உடனடியாக அரசு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்.

அவர் சொன்னது முதல் தினமும் அதிகாரிகள் எனக்கு போன் செய்து கொண்டே இருந்தார்கள். அத்தனை நடைமுறைகளையும் செய்து ஒரே வாரத்தில் வேலையையும் கொடுத்துவிட்டார்கள்.
எனக்கு உதய் அண்ணா உதவி செய்துள்ளார். அவரைப் போல நானும் என்னைப் போன்ற பார்வை குறைபாடு உடையவர்களுக்கு என்னால் ஆன உதவியைச் செய்வேன். எனது வருமானத்தில் அவர்களுக்கு உதவுவேன்" என்கிறார் பாப்பாத்தி

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அவரது முதல் ட்வீட்டில், "பெரம்பலூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான செல்வி பாப்பாத்தி தனது குடும்பச் சூழலை விளக்கி வேலைவாய்ப்பு கேட்டு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
முதுகலை பட்டதாரியான அவருக்கு Outsourcing முறைப்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளராக பணியாற்றுவதற்கான பணி ஆணையைத் தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினோம். சகோதரிக்கு என் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்

அடுத்த பதிவில், "விளையாட்டு வீராங்கனையும், பார்வை மாற்றுத்திறனாளியுமான சகோதரி பாப்பாத்தியின் கோரிக்கைக்கு உடனடி தீர்வாக, தமிழ்நாடு விளையாட்டுத்துறை அலுவலக உதவியாளருக்கான தற்காலிக பணி நியமன ஆணையை இன்று வழங்கினோம். தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ளும் அவருக்கு, இந்த பணி மேலும் உறுதுணையாக இருக்கும். வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications