ஒரு வார்த்தை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால்.. குழந்தையை பலாத்காரம் செய்தவர் விடுதலை.. கண்டுபிடித்த ஹைகோர்ட்
சென்னை: ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையில் ஏற்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக், 2 வயது குழந்தையைப் பலாத்காரம் செய்த குற்றவாளி விடுதலைக்குக் காரணமாகியுள்ளது. தற்போது சில வருடங்கள் கழித்து, அந்த தவறை சென்னை உயர்நீதிமன்றம் கண்டுபிடித்து, குற்றவாளிக்கு விடுதலையை ரத்து செய்துள்ளது.
2017ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. ஒரு பெண். கஷ்டப்பட்ட குடும்பம். அவருக்கு 2 பெண் குழந்தைகள். ஒரு குழந்தைக்கு அப்போது 9 மாதங்கள், இன்னொரு குழந்தைக்கு 2 வயது.
இருவரையுமே பக்கத்து வீட்டுக்காரரிடம் விட்டு விட்டு இந்த பெண் காய்கறி வாங்கச் சென்றுள்ளார். திரும்பி வந்து தனது குழந்தைகளை வீட்டுக்கும் அழைத்துச் சென்றார்.
சென்னை மழை நீர் வடிகால்.. ககன்தீப் சிங் பேடி போட்ட ஒரே ஆர்டர்.. ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்
குழந்தைக்கு நேர்ந்த கொடுமை
ஆனால் 2 வயதுக் குழந்தை அழுது கொண்டே இருந்தது. சாப்பிடவில்லை. தனது பிறப்புறுப்பை நோக்கி கை காட்டி வலிப்பதாகக் கூறியது. இதையடுத்து சிறுமியின் பிறப்பு உறுப்பைப் பரிசோதித்துப் பார்த்துள்ளார் தாய். அப்போது வெள்ளை நிற திரவம் ஒன்று அங்கிருந்து வடிந்து கொண்டிருந்தது. அந்த திரவம் சிறுமியின் உள்ளாடையிலும் பட்டு இருந்தது. இதை கவனித்த தாய் பயந்து போனார். உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்று குழந்தையைக் காண்பித்தார். அவர் பரிசோதித்து விட்டு, குழந்தை ஆண் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது என்பதையும், பலாத்காரம் செய்த ஆணின், விந்துதான் வெள்ளை நிற வடிவில் வந்த திரவம் என்பதையும் உறுதி செய்தார்.
குற்றவாளி விடுதலை
கொதிப்படைந்த அந்த தாய், பக்கத்து வீட்டுக்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு குழந்தைகள் பலாத்கார குற்றத்தடுப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவில், குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்தது போக்சோ நீதிமன்றம். போதிய அளவுக்குச் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிமன்றம் இதற்கு காரணமும் கூறியது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில்தான், குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அந்த தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சமீபத்தில் நீதிபதி வேல்முருகன் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்சோ நீதிமன்றத்தில், இந்த வழக்கின் முதல் சாட்சியமான, சிறுமியின் தாய் வாக்குமூலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதை நீதிபதி கண்டுபிடித்தார்.
ஒரு வார்த்தையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்
விந்து என்பதைக் குறிக்க ஆங்கிலத்தில், நீதிமன்ற பணியாளர் semen என்று டைப் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அவரோ Semman என்று டைப் செய்து விட்டார். செம்மண் என்று இதைக் குறிப்பிட்டு குற்றவாளி தரப்பு வக்கீல் வாதாடியுள்ளார். குழந்தையின் பிறப்புறுப்பில் செம்மண் இருந்ததை வைத்து, எனது குற்றவாளி பலாத்காரம் செய்ததாக எப்படி கூற முடியும் என்று கேட்டுள்ளார் குற்றவாளி தரப்பு வக்கீல். விந்து என்பது முக்கியமான ஆதாரம். ஆனால் இது செம்மண் என மாறிப்போனதால், குற்றவாளி விடுதலைக்கு அது உதவியுள்ளது.
குழந்தை நிலைமை முக்கியம்
இதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி வேல்முருகன், குழந்தைக்கு தனக்கு நேர்ந்ததைச் சொல்ல தெரியாது. அதற்காகக் குற்றவாளிக்கு ஆதரவாக நாம் நிலைப்பாடு எடுக்கக் கூடாது. இதில் குழந்தைக்கு அடுத்து முக்கிய சாட்சி அவரது தாய். அவர் இது பலாத்காரம் என்கிறார். டாக்டரும் பலாத்காரம் நடந்ததை உறுதி செய்துள்ளார். விந்து என்பதற்குப் பதில் செம்மண் என்று குறிப்பிட்டதால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலையாகியுள்ளார். இதை கீழமை நீதிமன்றம் உறுதிப்பட விசாரித்திருக்க வேண்டும்.
விடுதலை நிறுத்தம்
போக்சோ சட்டத்தின் செக்ஷன் 9ன்கீழ், குற்றம்சாட்டப்பட்டவர்தான் குற்றவாளி என்பது தெரியவருகிறது. எனவே விசாரணை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததை ஹைகோர்ட் நிறுத்தி வைக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான புகார்களைத் தள்ளுபடி செய்ய முடியாது. இவ்வாறு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.