தமிழ் பையனுக்காக போலந்தில் இருந்து வந்த பெண்.. சென்னையில் டும் டும்.. சுவாரசிய காதல் திருமணம்
சென்னை: சமீப நாட்களாக தமிழ்நாட்டு ஆண்கள், வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிக அளவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது போலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணை தமிழ்நாட்டு இளைஞர் ஒருவர் காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், போலாந்து பெண் இந்து முறைப்படிதான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியதையடுத்து இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

காதல்
போலந்தை சேர்ந்தவர் மார்த்தா ஆன். சென்னையை சேர்ந்தவர் மூர்த்தி கிருஷ்ணன். இவர் போலாந்து நாட்டில் மென்பொறியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் அங்கு அமேஸான் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ள மார்த்தா ஆன் என்பவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. காதலுக்குதான் எந்த வரையறையும் கிடையாதே. எனவே இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்துள்ளனர்.

டும் டும் டும்
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். ஆனால் மார்த்தா ஆன் ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்துள்ளார். அது இந்து முறைப்படி திருமணம் என்பதுதான் அது. எனவே இருவரும் திட்டமிட்டு தமிழர் முறைப்படி திருமணம் செய்துகொள்ள தேதி நிர்ணயித்துள்ளனர். இதனையடுத்து இன்று சென்யைில் இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் மார்த்தா ஆன் பெருமகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

நீண்ட நாள் கனவு
தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டதையடுத்து சந்தோஷத்தில் கணவருக்கும், அவரது தாயாரான தனது மாமியாருக்கும் மார்த்தா ஆன் முத்தமழை பொழிந்திருக்கிறார். சமீப காலங்களாகவே பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு பெண்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே மார்ததா ஆன் மற்றும் மூர்த்தி கிருஷ்ணனின் திருமணம் பார்க்கப்படுகிறது.

தொடர் நிகழ்வுகள்
இதேபோல சில நாட்களுக்கு முன்னர் ஒரு சுவாரஸ்யமான திருமணம் நெல்லையில் நடந்திருந்தது. அதாவது பிரான்சில் வளர்ந்த தன்னுடைய மகள்களை அந்நாட்டை சேர்ந்த மணமகன்களுக்கு தமிழர் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மாசிலாமணி - ஆனந்தி தம்பதியினர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்சில் வசித்து வந்த நிலையில், இந்த திருமணத்தை திருநெல்வேலியில் நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications