சென்னையில் மின்சார ரயிலில்.. தாவி சென்று செல்போன் பறிக்க முயன்ற திருடன்.. கால்களை இழந்து தவிப்பு
சென்னை: சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் ஜன்னல் ஓரம் இருந்த பயணியிடம் செல்போனை பறிக்க முயன்ற இளைஞர் தவறி தண்டவாளத்தில் விழுந்ததால் அவரது கால்கள் துண்டாகியது.
ரயில் மற்றும் பேருந்து பயணங்களின் போது ஜன்னலோர இருக்கையை விரும்பாத பயணிகளே இருக்க மாட்டார்கள்.
சாலையோரங்களில் வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வதற்காக இந்த சீட்டை பயணிகள் அதிகம் விரும்புவார்கள். எப்போது ஸ்மார்ட் போன் கையில் வந்ததோ அதன் பிறகு இதையெல்லாம் ஏறத்தாழ மறந்து போய்விட்டது என்று சொல்லாம்.
நடிகை திவ்யா கணவரோடு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் பிரபலமான சீரியல் நடிகை தானா? இப்படி எல்லாமா!!??
ஸ்மார்ட் போன்
அந்த அளவுக்கு அனைவரும் குனிந்த தலை நிமிராமல் செல்போனைத்தான் பார்த்து கொண்டு செல்கின்றனர். இதில் ரயில், பேருந்து என எந்த பயணமும் விதி விலக்கு அல்ல. எதிரில் இருப்பவர்களின் முகத்தை கூட பார்க்காமல் பல மணி நேர பயணமும் தற்போது அமைந்து விடுகிறது. சுற்றிலும் என்ன நடக்கிறது என்று பார்க்காமல் செல்போனில் மூழ்கி கிடப்பது சில நேரங்களில் ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது.
செல்போன் பறிக்க முயற்சி
ஏனென்றால் கொள்ளையர்கள் பெரும்பாலும் குறிவைப்பதுதான்.. ரயில்களில் ஏறி பயணிகள் அசந்த நேரத்தில் பொருட்களை கொள்ளையடித்து செல்கின்றனர். அதேபோல், ஜன்னலோரம் செல்போன்களை கையில் வைத்திருக்கும் பயணிகளிடம் செல்போனை பறிப்பதற்கென்றே ஒரு கும்பல் சென்னையிலும் உள்ளது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணிகளிடம் செல்போனை பறிக்க முயன்ற கொள்ளையன் தவறி விழுந்து கால் துண்டான சம்பவம் நடைபெற்றுள்ளது.
ரயில் சக்கரத்துக்குள் சிக்கினார்
இது குறித்த விவரம் வருமாறு: கடந்த புதன்கிழமை பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் - கொருக்கு பேட்டை இடையே மின்சார ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மின்சார ரயிலில் தாவி, ஜன்னலோரம் இருந்த பயணியின் செல்போனை பறிக்க முயன்றார். இதை பார்த்த சக பயணிகள் அலறினர். செல்போன் பறிக்கும் முயற்சியில் ரயிலின் ஜன்னலில் தொங்கிய அந்த இளைஞர் பிடி நழுவி ஓடும் ரயிலுக்குள் விழுந்தார்.
கால் துண்டானது
இதில் ரயிலின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் அவரது இரு கால்களும் பலத்த காயம் அடைந்த நிலையில், இடது கால் துண்டானது. ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார், கால் துண்டான வாலிபரிடம் விசாரித்தனர். அதில், கொருக்குபேட்டையை சேர்ந்த நவீன் (வயது 24) என்பது தெரியவந்தது.
விழிப்புடன் இருக்க வேண்டும்
இவர் மீது ஏற்கனவே 6 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளை முயற்சியின் போது கால் துண்டானதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் பென்சில் பேக்டரி - கொருக்குப்பேட்டை இடையே செல்லும் ரயில்கள் மெதுவாக செல்லும். இதைப்பயன்படுத்தி பயணிகளிடம் கொள்ளையடிக்க ஒரு கூட்டமே சுற்றுவதாக போலீஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதனால் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.