சென்னை எங்கே போயிடுச்சி பார்த்தீங்களா.. வீட்டிலேயே கஞ்சா செடி வளர்ப்பு.. இளைஞர் கைது
சென்னை: சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் கஞ்சா செடி வளர்த்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடவடிக்கையின் கீழ் கஞ்சா புழக்கத்தை ஒழிப்பதற்கான பணிகளில் காவல்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இடி மின்னலுடன் 4 நாட்களுக்கு கனமழை..5 மாவட்ட மக்களுக்கு ரெயின் கோட் அவசியம்
வீட்டில் ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தவறாக புரிந்து கொண்டாரோ என்னவோ, கஞ்சா செடி வளர்த்து போலீஸ் வலையில் சிக்கியுள்ளார் அந்த இளைஞர்.
கஞ்சா வேட்டை
தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் போலீஸ் இறங்கியுள்ளது. ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரிகளையும், விநியோகம் செய்யும் நபர்களையும் சுற்றி சுற்றி பிடித்து வருகிறது காவல்துறை. அந்த வகையில் தலைநகர் சென்னையில் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டு கிலோ கணக்கில் கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து வருவதுடன் அதில் தொடர்புடைய கும்பலை பொறிவைத்து பிடித்து வருகிறது ஸ்பெஷல் டீம்.
கஞ்சா செடி
அண்மையில் கூட சென்னை வேளச்சேரியில் உணவு டெலிவரி செய்வதை போல் வீடுகளுக்கே சென்று கஞ்சாவை விநியோகம் செய்து வந்த 3 பேர் கொண்ட கும்பலை தட்டித் தூக்கியது போலீஸ். இந்நிலையில் அந்த நிகழ்வு நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், மற்றொரு அதிர்ச்சிகர நிகழ்வு அதே சென்னையில் நடைபெற்றுள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தில் வினோத் என்ற இளைஞர் பூச்செடிகளை வீட்டில் வளர்ப்பது போல் சர்வ சாதாரணமாக கஞ்சா செடியை நட்டு வைத்து வளர்த்து வந்தது கண்டறியப்பட்டது.
கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனை மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்ற குறுக்கு புத்தியில் இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் அந்த 34 வயது இளைஞர். இதனிடையே கஞ்சா செடி வளர்ப்பில் தொடர்புடைய வேறு சிலர் குறித்தும் வினோத்திடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் சில சமூக விரோதிகள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
போதை வஸ்துகள்
கஞ்சா ஒழிப்பில் அரசும் காவல்துறையும் காட்டும் வேகமும், அக்கறையும் பொதுமக்கள் மத்தியில் ஓரளவு கவனம் ஈர்த்திருப்பதுடன் அவர்களின் பாராட்டையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. கஞ்சா மட்டுமின்றி அரசினால் தடை செய்யப்பட்டுள்ள போதை வஸ்துகள் அனைத்தையும் முற்றிலும் புழக்கத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.