90 நாள் கெடாத ஆவின் டிலைட்! ’பழைய’ பாலுக்கு புதிய பெயரா? கிளம்பிய புகார்! சர்ச்சைக்கு ஆவின் விளக்கம்
சென்னை : 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தும் ஆவின் 'டிலைட்' பால் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு முதல் விற்கப்பட்டு வருவதாக பால் விற்பனை முகவர்கள் புகார் கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது.
ஆவின் டிலைட் என்ற பெயரில் மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக பசும்பாலை தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதிய வடிவத்தில் பச்சை நிறத்தில் ஆவின் டிலைட் பாக்கெட்டுகள் 500 மில்லி என்ற அளவில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் பிரிட்ஜ் வசதி இல்லாதவர்கள் கூட 90 நாட்கள் வரை வைத்து இந்த பாலை பயன்படுத்தலாம் என்பதுதான். தற்போது அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை 30 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வகை பால்
நீண்ட தூரப் பயணம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் இந்த வகை பால் பாக்கெட் பெரிய அளவிலான பலனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பாலுக்காக மக்கள் இன்னல் படுவது தவிர்க்கப்படும் எனவும் பால் பவுடரை விட இந்த பாலை பயன்படுத்துவது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 3.5 சதவீத கொழுப்பு மற்றும் ஜீரோ சதவீத பாக்டீரியா உடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த ஆவின் டிலைட்.

பழைய பால்?
இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே விற்பனையில் இருந்த சிறிய வகை பால் பாக்கெட் மற்றும் சில பால் பொருட்களை புதிதாக அறிமுகம் செய்வதாக கடந்த காலங்களில் கூறியது போல் தற்போது அதே வரிசையில் ஆவின் டிலைட் பசும்பாலினை சேர்த்திருக்கிறது ஆவின் நிர்வாகம் எனவும், சுமார் 14ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் ஆவின் டிலைட் பசும்பால் (Fat 3.5% SNF 8.5%, 0%Bacteria, 90நாட்கள் காலாவதி தேதி, விற்பனை விலை 30.00ரூபாய்) பாக்கெட்டை தற்போது தான் புதிதாக அறிமுகம் செய்வதாக கூறியுள்ளதாக தமிழக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியிருந்தது.

ஆவின் பால்
இந்நிலையில் இது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கும் ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி சேலத்தில் 180 நாட்கள் கெட்டுப் போகாத வகையில் டெட்ரா பேக் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சோழிங்கநல்லூரில் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் பிளக்ஸி பேக்கில் தயாரிப்பதற்கு பிரத்தியேகமாக இயந்திரங்கள் நிறுவப்பட்ட நிலையில் அங்கு உற்பத்தி தொடங்கி இருக்கிறது. கொள்முதல் செய்யப்படும் பால் 72 முதல் 75 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 15 வினாடிகள் வைக்கப்பட்டு உடனடியாக 5 டிகிரி உறைநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது.

வதந்தி கிளப்ப வேண்டாம்
ஆனால் ஆவின் டிலைட் பால் 132 டிகிரி முதல் 135 டிகிரி வரை இரண்டு வினாடிகள் வைக்கப்படும் அதன் காரணமாக தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மறைந்து விடும். அதன் பிறகு அறை வெப்ப நிலைக்கு பால் கொண்டு வரப்பட்டு ஏழு அடுக்கு பாலிபிலிம் பேக்கில் அடைக்கப்படுகிறது. இதனால் நுண்ணுயிர் வர வாய்ப்பு இல்லாமல் பால் 90 நாட்கள் வரை கெடாது எனவும் இது தொடர்பாக பின் வதந்திகளை கிளப்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications