அப்துல் கலாம் டூ அம்பேத்கர்! யார் இந்த ஆதவ்? மார்டினுக்கு மருமகன் ஆனது எப்படி?
சென்னை: விசிக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கடந்து வந்த பாதையைப் பற்றியும் அவர் யார்? அவரது பின்புலம் என்ன என்பது பற்றியும் அலசி ஆராய்ந்துள்ளோம்.
ஐந்து ஆண்டுகள் முன்பாக விளையாட்டு களத்தில் ஆட்ட நாயகனாக இருந்த ஆதவ் அர்ஜுனா இன்று தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மையப் புள்ளியாக மாறி இருக்கிறார். விசிகவில் இணைவதற்கு முன்பாக அவரை பலருக்கும் தெரியாது. அவர் கடந்த 2019 திமுக ஆட்சிக்காக தேர்தல் வியூகங்களை வகுத்தது தான் தான் என்றும் பிரசாந்த் கிஷோரை திமுக தேர்தல் பணிக்காக அழைத்து வந்ததும் தானே என்றும் இப்போது வெளிப்படையாகப் பேசத் தொடங்கி இருக்கிறார்.

ஆனால், திமுக வெற்றிக்குப் பிறகு அந்த அடையாளத்தை ஆதவ் எங்கேயும் சொன்னதே இல்லை. இவர்தான் பிரசாந்த் கிஷோரை திமுகவுக்கு அழைத்து வந்தார் என்பது பற்றி திமுக வட்டாரத்திற்குள் இருந்து யாரும் உடைத்துப் பேசவே இல்லை.
இன்றைக்கு அரசியல் களத்தில் சர்ச்சை நாயகனாக வலம் வரும் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தில் செயல்பட்ட போது சர்ச்சைகளை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கியவர்தான். அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளராக இவர் 2017இல் பொறுப்புக்கு வந்த போது 30 ஆண்டுகளாகச் சங்கத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்காமலிருந்த நிர்வாகிகளை நோக்கி கேள்வி கேட்டார் எனச் சொல்லப்படுகிறது. 7 லட்சம் கடனிலிருந்த நிர்வாகத்தை மீட்க அவர் சில முயற்சிகளை எடுத்தார் என்றும் அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனா வேலூர் பக்கம் உள்ள கிராமத்தில் பிறந்தவர். அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தான் தன்னை இளம் வயதில் வளர்த்ததாகச் சொல்லி இருந்தார். திலகவதி இவரது அம்மாவின் சகோதரி என்றும் பேசி இருந்தார். அந்த உண்மையை இதுவரை சொன்னது இல்லை எனவும் கூறி இருந்தார்.
ஆனால், தனது தாயை இழந்த பிறகு 5 வயதில் தாய்மாமன் ராம மூர்த்தி வீட்டுக்குச் சென்ற ஆதவ், 12 வயது வரை திருச்சியில் மாமா உதவியில் வளர்ந்து வந்ததாகவே அவர் முன்பு கூறியிருந்தார். அதன் பின்னர் அவரை திலகவதி சென்னையில் படிக்கவைத்தாரா? என்பது பற்றி விவரம் தெரியவில்லை.
ஊரில் அரசுப் பள்ளியில் படித்த ஆதவ், சென்னை ராமகிருஷ்ணா மடத்தில் படித்துள்ளார். அங்கேதான் அவருக்கு விளையாட்டு ஒரு தொழில் என்பது புரிந்துள்ளது. பின்னர் அதில் வேகம் காட்டி உள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுதியில் படித்த அவருக்கு அரசு உதவியுடன் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் அரசியல் அறிவியல் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவர் 2015 இல் தேசிய அளவில் நடந்த போட்டியில் பங்கேற்று விளையாடி இருக்கிறார். 2017 இவர் சங்கப் பொறுப்பிலிருந்த போது 7 ஆண்டுகள் கழித்து தேசிய அளவில் தங்கம் வென்றுள்ளது தமிழ்நாடு அணி. இந்த விளையாட்டுத் துறை மூலம்தான் அவருக்கு மார்ட்டின் மகள் டெய்ஸி அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதுவே காதலாகி இருக்கிறது.

இவர் சிறுவயதிலிருந்தே தனிமையில் வாழ்ந்தவர். எனவே தனது காதலை மார்ட்டினிடம் இவரே சென்று விளக்கி பெண் கேட்டுள்ளார். அவரும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்குள் சென்ற பிறகு Arise Group நிர்வாக இயக்குநராக மாறினார் ஆதவ். கிட்டத்தட்ட மார்ட்டினிடம் 5 ஆண்டுகள் தொழில் கற்றார். அப்போது இவரது ஆதர்ச நாயகனாக அப்துல் கலாம் இருந்துள்ளார். அதன் பின்னர் திருபாய் அம்பானி இருந்துள்ளார். இதே காலகட்டத்தில் அம்பேத்கர் பற்றி அவர் படித்து வந்தாலும் அவருக்கு அரசியல் பற்றிய ஆர்வம் இருக்கவில்லை.
விளையாட்டுத்துறையை முன்னேற்றுவதற்காக Arise ஸ்போர்ட்ஸ் அகாடமியை உருவாகி உள்ளார். தினம் மெரினா கடற்கரைக்கு மனைவியுடன் போகும் ஆதவ்க்கு அங்கே உள்ள ஏழை வியாபாரிகள் நிலை பற்றி தெரிய வந்துள்ளது. 1000 ரூபாய் தினம் கடன் பெறும் ஒரு பெண் வியாபாரி வட்டியாக 100 ரூபாய் கட்டிவிட்டு அதில் 300 ரூபாய் உழைத்து லாபம் பெறுவதை உணர்ந்துள்ளார். அதை வைத்து ஒரு மைக்ரோ பைனான்ஸ் கம்பெனியை கோவையில் தொடங்கி உள்ளார். பின்னர் ரியல் எஸ்டேட். அதில் இவர் காலடி எடுத்து வைக்கும் போது அந்தத் துறையே இந்தியாவில் முடங்கிப் போய் இருந்தது. அதில் 3 வருடத்தில் லாபம் பார்த்தார்.
தனது மாமனாரை அப்போது குருவாக ஏற்றிருந்தார் ஆதவ். மார்ட்டின் மீது பல குற்றச்சாட்டுகள் அப்போது நிலவின. ஆனால், அவை யாவும் தொழில் போட்டியால் வந்தவை என்கிறார் ஆதவ். இந்தியாவில் லாட்டரி தொழில் என்பதை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பின் மேற்கு வங்கத்தில் லாட்டரி தொழில் மூலம் சம்பாதித்து 4 ஆயிரம் கோடி வரி கட்டியவர் தன் மாமனார் என்று விளக்கம் அளித்திருந்தார் ஆதவ்.
மேலும் இந்தியாவில் அதிக அளவில் வரிக்கட்டும் தொழிலதிபராகத் தனது மாமா இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார். சட்டப்படி எங்கேயும் அவர் தொழில் குற்றம் எனச் சொல்லவில்லை. மேற்கு வங்க அரசே தனது மாமாவைப் பாராட்டிய நிகழ்வுகள் உண்டு என்றும் பேசி இருந்தார்.
விளையாட்டுத் துறையில் இவர் இருந்தபோது அவரை ஈர்த்தவர்கள் அப்துல் கலாம், விவேகானந்தர், ஹிட்லர். தொழிலதிபராக வந்த போது திருபாய் அம்பானி. இப்போது அரசியலுக்கு வந்த பிறகு அவருக்குப் பிடித்தவர் அம்பேத்கர். தனது மீது விளையாட்டுத் துறையிலிருந்த போது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பற்றி பதில் அளிக்கும் போது ஆதவ் அர்ஜுனா, "விளையாடும் போது வெற்றியைத்தான் பார்க்க வேண்டும். அவமானங்களைப் பார்க்கக் கூடாது" என்று தனது விளையாட்டு குரு சொன்னதாகக் கூறி இருந்தார். அது இப்போது அரசியலுக்கும் பொருந்தியுள்ளது.












Click it and Unblock the Notifications