நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக வீரலட்சுமி...என்னடா இது சீமானுக்கு வந்த அடுத்த சோதனை!
சென்னை: நடிகை விஜயலட்சுமிக்காக சீமானிடம் நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி திடீரென அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழக அரசியலில் சில ஆண்டுகளுக்கு மிகப் பெரிய பரபரப்புகளை கிளப்பியவர் வீரலட்சுமி. 2015-ல் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று விமர்சித்ததற்காக குஷ்பு வீட்டை முற்றுகையிடுவேன் என எச்சரித்தவர் வீரலட்சுமி.
பின்னர் சென்னையில் ஆந்திர நடிகர் சோபன்பாபு சிலையை அகற்றும் விவகாரத்தில் ஆவேசமாக போராட்டம் நடத்தினார். நடிகர் சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்ச்சையில் சிக்கிய போது, தமிழனான சிம்புவுக்காக தற்கொலைப் படையாவேன் என்றார் வீரலட்சுமி.

தீக்குளிக்க சீமானுக்கு சவால்
2016 சட்டசபை தேர்தலின் போது அனைவரது கவனைத்தையும் ஈர்த்தார் வீரலட்சுமி. அப்போது மக்கல் நலக் கூட்டணிக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தார். அப்போதே சீமானை வம்பிழுத்தார் வீரலட்சுமி. தமிழரை தமிழரே ஆள வேண்டும் என்ற போராட்டத்துக்காக நாடாளுமன்றம் முன்பாக தீக்குளிக்க சீமான் தயாரா என பகீர் சவால் விட்டார்.

லைம்லைட்டில் இல்லை
2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்று மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் மக்கள் நலக் கூட்டணியில் இருந்தும் விலகினார். ஆனால் வைகோதான் என் அரசியல் குரு; எனக்கு தாயும் தந்தையுமானவர் என மகளாக பாசமழை பொழிந்தார் வீரலட்சுமி.. பின்னர் சில ஆண்டுகளாக அரசியல் பரபரப்பில் இருந்து ஒதுங்கியவராகவே இருந்தார்.

அரிவாள் வீடியோவால் பரபரப்பு
சில மாதங்களுக்கு முன்னர் கையில் அரிவாள் சகிதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, எனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவன் கிடைத்தால் ஆணுறுப்பை அறுப்பேன் என சவால்விடுக்கப் போய் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் வீரலட்சுமி. ஒருவழியாக வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவரை சென்னை போலீசும் கைது செய்து சிறையில் அடைத்தது. இப்போது சீமான் ஆகப் பெரும் சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் நிலையில் அதே சீமானுக்கு எதிராக களம் காணப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் வீரலட்சுமி.

சீமான்-விஜயலட்சுமி விவகாரம்
சீமான் மேடை பேச்சாளராக இருந்த போது தம்முடன் குடும்பம் நடத்தினார் என்பது நடிகை விஜயலட்சுமியின் நீண்டகால புகார். இதற்கான போட்டோ, வீடியோ ஆதாரங்கள் என பலவற்றையும் வெளியிட்டு போலீசிலும் புகார் கொடுத்தார். இது தொடர்பாக இடைவிடாமல் வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார் விஜயலட்சுமி. இதனால் சீமானின் நாம் தமிழர் கட்சியினருக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடுமையான வார்த்தை மோதல்கள் நிகழ்ந்தது உண்டு. ஆனால் சீமான் இதுவரை விஜயலட்சுமியின் இந்த புகார் குறித்து கனத்த மவுனம் சாதித்தும் வருகிறார்.

விஜயலட்சுமிக்கு நீதி கோரி போராட்டம்
இந்நிலையில் நடிகை சகோதரி விஜயலட்சுமிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப் போகிறேன் என அறிவித்திருக்கிறார் வீரலட்சுமி. விஜயலட்சுமிக்கு நீதி கேட்டு நவம்பர் 27-ந் தேதியன்று சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்பது வீரலட்சுமியின் அறிவிப்பு. 100 நாள் வேலை திட்டத்துக்கு எதிர்ப்பு, ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தியது, போதை- ஆயுதக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு, ஆயுதப் போராட்டம் என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி விவகாரத்தை கையில் வீரலட்சுமி எடுத்திருப்பது மிகப் பெரும் குடைச்சலாகவே இருக்கும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications