சாகுற வயசா இது? தொடரும் மாரடைப்பு மரணங்கள் - நடிகர் சேதுராமன் முதல் இசையமைப்பாளர் ரகுராம் வரை
சென்னை: ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்துக்கு இசையமைத்த 30 வயதான தமிழ் சினிமா இசையமைப்பாளர் ரகுராம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்து இருக்கிறார். தொடர்ந்து 40 வயதுக்கு குறைவான இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன? விரிவாக பார்ப்போம்.
மன அழுத்தம் இருந்தால் சினிமா பாருங்கள், இசையை கேளுங்கள் என்று மனநல மருத்துவர்கள் அறிவுறுத்துவதை கேட்டிருப்போம். ஆனால், சினிமா நடிகர்களும், இசையமைப்பாளர்களுமே இளம் வயதில் மாரடைப்பில் பலியாகி வருவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து இதய நிபுணர்கள் கூறுகையில், "உலகம் முழுவதும் பல தசாப்தங்களாக மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. எத்தனை மருத்துவ முறைகள் வந்தாலும் இதய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே கடந்த சில ஆண்டுகளாக இதய பிரச்சினைகள் அதிகரித்து வருவது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன அழுத்தம்
நீண்ட காலமாக மனித சமுதாயத்தில் இதய நோய் பிரச்சனை அழிவை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் கடுமையான மன அழுத்தத்தை சந்திக்கும்போதும் இதயம் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறது. ஏற்கனவே இதயத்தில் இருக்கும் அடைப்புகளுக்கு அருகில் கட்டிகள் உருவாகும். இது இரத்த உறைவு மற்றும் மாரடைப்புக்கு ஏற்பட காரணமாக மாறிவிடும்.
ஆய்வுகள்
மன அழுத்தம் மற்றும் பதட்டத்துக்கும் இதய நோய்களுக்கும் அதிக தொடர்புகள் உள்ளன. நீண்ட கால மன அழுத்தத்திலிருந்து அதிக கார்டிசோல் அளவுகள் ஒரு நபரை உயர் இரத்த கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள், இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உணவு முறை
உணவு என்ற பெயரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை சிலர் உண்கிறார்கள். இதன் காரணமாக இதய பாதிப்பு ஏற்படுகிறது. இது அரித்மியாவுக்கு வழிவகுக்கிறது. ஒரு நபர் தனது 20 வயதில் இருக்கும்போது, கொலஸ்ட்ரால் அல்லது வேறு சில காரணங்களால் உணவை உட்கொள்வதில் கட்டுப்பாடுகளை (டயட்) ஏற்படுத்த தொடங்கிறார்கள்.
மது, சிகரெட்
இதய நோய்கள் வராமல் தவிர்க்க சர்க்கரை மற்றும் கொழுப்பு பொருட்களை அதிகளவுல் சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும். உடலில் இருக்கும் கொழுப்புச் சத்துகளைக் கண்காணிக்க வேண்டும். மிக முக்கியமாக புகைபிடித்தல் மற்றும் மது பழக்கத்தை நிறுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மரபணு
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால், இதயநோய் நிபுணர் அல்லது இதய மின் இயற்பியல் நிபுணரைச் சந்திக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பான்மை மக்களுக்கு நோய்கள் மரபணு ரீதியாகவே ஏற்படுகின்றன. இதய நோய்க்கு இதுவும் காரணம். ஆனால், அதற்கான காரணங்களை அறிந்து தவிர்க்கலாம்.
பரிசோதனை
இளைஞர்கள் முன்பே இதய பரிசோதனை செய்து கொள்வதில்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதய பரிசோதனை செய்யாமல் உடற்பயிற்சி செய்ய இளைஞர்கள் தொடங்குகிறார்கள். பின்னர் ஜிம்மில் எடைப் பயிற்சி மேற்கொள்கிறார்கள். டிரெட்மில், கிராஸ் வொர்கவுட் பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது இதயத்தின் தடிமனை அதிகரிக்க வைக்கிறது.