5 ரூபாய் கூட உதவும்.. பிச்சை என சொல்லி இழிவு படுத்த வேணாம்.. குஷ்புவுக்கு நடிகை அம்பிகா அட்வைஸ்!
சென்னை: நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, மகளிர் உரிமைத்தொகை பற்றி பேசிய பேச்சுக்கு நடிகை அம்பிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை செங்குன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பிரஸ் மீட்டில் பேசிய விஷயம் சர்ச்சைக்கு உள்ளானது. தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார் குஷ்பு.

பெண்கள் உட்பட அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படும் திமுக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பிச்சை என விமர்சித்து பேசிய குஷ்புவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுகவினர் நடிகை குஷ்புவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் குஷ்பு பேச்சைக் கண்டித்து திமுக மகளிர் அணியினர் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
எனினும் தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார் குஷ்பு. தனது பேச்சை வைத்து பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப திமுகவினர் முயற்சிப்பதாக குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனக் கூறி வீடியோவையும் வெளியிட்டுள்ளார் குஷ்பு.
இந்நிலையில் நடிகை அம்பிகா, குஷ்புவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களுக்கு உதவும் திட்டத்தை பாராட்டா விட்டாலும் பரவாயில்லை, இழிவாகப் பேசக்கூடாது என குஷ்புவுக்கு பாடம் எடுத்துள்ளார் அம்பிகா. அம்பிகாவின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகை அம்பிகா, "எதுவாக இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும்.. எந்த கட்சியாக இருந்தாலும் சரி... ஏதாவது ஒரு உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ.. ஏற்றுக்கொண்டு பாராட்ட வேண்டும். அப்படி பாராட்ட முடியாவிட்டால் எதுவும் பேசக் கூடாது. இழிவான வார்த்தைகளையும் பயன்படுத்தகூடாது. எதற்காக பிச்சை என்ற வார்த்தையை சொல்லணும்? 5 ரூபாய் கூட அவர்களுக்கு உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications