தீபா வெங்கட் பற்றி தீயாக பரவிய வதந்தி.. கொரோனா தடுப்பூசி போட்டு நல்லா இருக்கிறார்.. தாய் விளக்கம்
சென்னை: நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட் பற்றி தீயாக பரவிய ஒரு வதந்தி அவரது தாயாரால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா, சினேகா உள்ளிட்ட தமிழின் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் தீபா வெங்கட்.
இவரது குரல் வளமை மற்றும் டப்பிங் திறமைக்காக தனி ரசிகர் கூட்டம் சேர்ந்துவிட்டது. அஜித் நடித்த பாசமலர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக திரையில் தோன்றினார்.

தில், உள்ளம் கொள்ளை போகுதே
அஜித் மற்றும் விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் திரைப்படத்திலும் நடித்தார். விக்ரம் நடித்த "தில்" திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து இருப்பார். உள்ளம் கொள்ளை போகுதே, திரைப்படத்தில் பிரபுதேவா தங்கையாக நடித்திருப்பார். இரண்டு திரைப்படங்களிலும் இவரது நடிப்பு மற்றும் அண்ணன்-தங்கை பாச பிணைப்பு கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

சின்னத் திரை புகழ்
சின்னத்திரையிலும் தீபா வெங்கட் பிரபலமடைந்தார். 1996 வருடம் சன் டிவியில் ஒளிபரப்பான "இப்படிக்கு தென்றல்" என்ற சீரியல் தீபாவுக்கு முதல் தொலைக்காட்சி தொடர் ஆகும். சித்தி சீரியல், தீபா வெங்கட்டுக்கு பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது. 90ஸ்கள் மற்றும் 2000மாவது ஆண்டு தொடக்கங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் தீபா வெங்கட் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார். எனவே, தொடர்ந்து ரசிகர்களின் பார்வையில் அவர் பட்டுக் கொண்டே இருந்தார்.

விருது பெற்ற தீபா வெங்கட்
2010ம் ஆண்டு வரை படங்கள் அல்லது சீரியல் என்று ஏதாவது ஒரு வகையில் தீபா வெங்கட் பிஸியாக இருந்தார். கிட்டத்தட்ட 80 சீரியல்களில் அவர் நடித்துள்ளார். தேவயானி தோழியாக, கோலங்கள் சீரியலில், தீபா வெங்கட் கதாபாத்திரம் அழுத்தமாக அமைந்திருந்தது. தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெற்ற சிறப்புக்குரியவர் தீபா வெங்கட்.

தீபா வெங்கட் திருமணம்
2010ம் ஆண்டு, ராஜகோபால் என்ற ஐடி துறையில் பணியாற்றுபவரை, திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமா மற்றும் சீரியல் ஆகிய இரண்டிலிருந்தும் ஒதுங்கிவிட்டார். பிறகு தனியார் வானொலியில் ரேடியோ ஜாக்கியாக 10 வருடங்கள் பணியாற்றி இப்போது அதிலிருந்தும் விலகி உள்ளார்.

போடா, போ, நான் செட்டே ஆக மாட்டேன்
இந்த இடைவெளியில், மயக்கமென்ன, இமைக்காநொடிகள், கேம் ஓவர் போன்ற திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுத்திருந்தார். "போடா போ உனக்கு ஊர்ல கனிமொழி, தேன்மொழிதான் செட் ஆகும்.. நான்லாம் உனக்கே செட்டே ஆக மாட்டேன்" என்று ராஜா ராணி படத்தில் நயன்தாரா கூறிய டயலாக் பேமஸ். ஆனால் அதை தீபா வெங்கட் பேசியது பலருக்கும் தெரியாது. இப்படி கதாப்பாத்திரத்தோடு ஒன்றிய டப்பிங் வாய்ஸ்தான் தீபா பலம்.

தீபா வெங்கட் பற்றி வதந்தி
45 வயதாகும் தீபா வெங்கட் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு நிம்மதியாக இப்போது வீட்டில் இருக்கிறார். இந்த நிலையில்தான் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக தீபா வெங்கட், உயிரிழந்து விட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரப்பி விடப்பட்டது. இதனால் பதறிப்போன அவரது தாய் பத்மா வெங்கட், எனது மகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் வீட்டில் நல்லா இருக்கிறார்.. அவர்தான் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்கிறார். யாரோ வதந்தி பரப்பி விட்டார்கள், தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள் என்று தனது வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இப்படி வதந்தி பரப்புவோருக்கு மனசாட்சியே கிடையாதா?












Click it and Unblock the Notifications