நடிகை பாலியல் புகார்: மாஜி அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9 வரை கைது செய்ய ஹைகோர்ட் தடை
டிகை பாலியல் புகார் வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9 ஆம் தேதி வரைக்கும் கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வரும் 9ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நடிகையின் ஆட்சேபனை மனுவை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொன்னார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.
காவலர்கள் விசாரணை
மணிகண்டனின் மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று தெரிவித்து இருந்தார். சாந்தினி அளித்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பொய் புகார்
இந்த புகாரை மணிகண்டன் மறுத்துள்ளார். நடிகை சாந்தினி யார், என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
கைது செய்ய தீவிரம்
மணிகண்டனை தலைமறைவான நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்ய தேடி வந்தனர்.
இதனிடையே பாலியல் வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ரூ. 5 லட்சம்
அந்த மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் நடிகை சாந்தினி பணம் பறிக்கும் நோக்கத்தில் தன் மீது புகார் அளித்துள்ளதாகவும், அவர் மலேசியாவில் இதுபோல் மோசடி செய்ததாகவும், மருத்துவ உதவிக்காக தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டதால் தன்னை மிரட்டுவதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு
இந்த நிலையில் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை சாந்தினி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. பணம் பறிப்பதற்காகவே புகாரை கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறும் குற்றச்சாட்டு பொய் என்றும், திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் சேர்ந்து வாழ சம்மதித்தேன் என்று அந்த மனுவில் நடிகை சாந்தினி குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 9 வரை கைது செய்யக் கூடாது
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வரும் 9ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும், நடிகையின் ஆட்சேபனை மனுவை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.