நடிகை சினேகாவிடம் ரூ.26 லட்சத்தை பெற்று திருப்பி தராமல் மிரட்டும் தனியார் நிறுவனம்: போலீஸில் புகார்
தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் சில பர்சண்டேஜ் லாபம் மாதா மாதம் தருவதாக பணம் பெற்று பங்கும் தராமல் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுவதாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடிகை சினேகாபிரசன்னா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
வக்கிர எண்ணம் படைத்தோருக்கு வலை: பாலியல் வீடியோ பார்த்தவர்களை தட்டி தூக்கிய சிபிஐ!
முன்னணி நடிகை சினேகா
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ்பெற்றவர். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த காலத்தில் பல விருதுகளையும் பெற்றுள்ளார். வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப் , பம்மல் கே சம்மந்தம், ஜனா, புதுப்பேட்டை, ஆனந்தம் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
பிரசன்னாவுடன் காதல் திருமணம்
2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து விளம்பரப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.
ஏமாற்றப்பட்ட சினேகா
இந்நிலையில் நடிகை சினேகா கமிஷனர் அலுவலகத்தில் ஆன் லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனியார் சிமெண்ட் மற்றும் மினரல்ஸ் நிறுவனம் ஒன்றின் பங்குதாரர்களான தம்பதி மற்றும் மற்றொரு பங்குதாரர் 3 பேர் தன்னிடம், தங்கள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை பங்காக கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் தருவதாக ஆசைக்காட்டியதன் பேரில் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சமும், நேரில் ரூ.1 லட்சமும் கொடுத்ததாகவும் இதற்காக மாசம் ரூ.1.80 லட்சம் லாபம் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் ஐந்து மாதம் ஆகியும் பங்கு தொகையும் தராமல், அசல் தொகையும் தராமல் இருப்பதாகவும் இதுகுறித்து கேட்டபோது பணம் தர முடியாது என அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின்பேரில் விசாரிக்கும் போலீஸார்
ரூ.1 லட்சத்தை நேரில் அண்ணா என்கிளேவ், ஈஞ்சம்பாக்கம் என்கிற முகவரியில் நேரில் கொடுத்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு பங்கு தொகை பற்றி கேட்கும்போது தராமல், தன்னை மிரட்டுவதாக சினேகா கடந்த சில மாதங்களுக்கு முன் ஆன்லைனில் மேலதிகாரிகளிடம் அளித்த புகார் தற்போது கானத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்க உள்ளனர். புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் தொகை அதிக அளவு உள்ளதால் சிசிபி போலீஸுக்கு மாற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத்தொடரப்படும் எனத் தெரிகிறது.
இப்படியும் ஏமாறலாமா? வழிகாட்டும் போலீஸார்
ஒன்றும் அறியாத மக்கள் தங்கள் வாழ்க்கை சேமிப்பை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதிநிறுவனங்கள், தனியார்களிடம் முதலீடு செய்து மொத்தப்பணத்தையும் இழந்துவிட்டு எங்களிடம் வந்து நிற்கின்றனர். கோடிக்கணக்கில் வசூலித்து ஏமாற்றியவன் பெரிய வக்கீல்களை வைத்து வழக்காடுகிறான். அவர்கள் அறியாத மக்கள், ஆனால் பிரபலமானவர்கள், சமூகத்தில் நல்லது கெட்டது தெரிந்தவர்களும் இப்படி பணத்தை பறிகொடுத்தால் என்ன செய்வது. குறைந்தப்பட்சம் யாரிடமாவது லீகல் ஒபீனியன் கேட்டாலே அதில் உள்ள சிக்கலையும், நிறுவனத்தில் எப்படி முதலீடு செய்வது என்பதையும் எளிதாக டாக்குமெண்ட் போட்டு கொடுத்துவிடுவார்கள் என்கின்றனர் இதுபோன்ற வழக்குகளை விசாரித்து அனுபவம் பெற்ற காவல்துறையினர்.