சும்மா போகல டெல்லிக்கு.. ஆதவ் அர்ஜுனா கையில் மெகா அசைன்மென்ட்! எச்எம், எஃப்எம் உடன் சந்திப்பு? பரபர
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லிக்கு சென்றிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா. இந்த நிலையில் அடுத்தடுத்து சட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், பாஜகவின் தயவை நாடியே அவர் டெல்லி சென்றிருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவரின் ஆதரவோடுதான் அவர் டெல்லி சென்றார் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் கொடுந்துயர் சம்பவம் மக்கள் மனதில் இன்னும் ஆழமாகப் பதிந்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை விஜய் இன்னும் சந்திக்காதது கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும், த.வெ.க-வின் ஆனந்த் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல்
இந்நிலையில், த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "என் தாயின் இழப்புக்குப் பிறகு கரூரில் என் குடும்பத்தில் ஏற்பட்ட 41 உயிரிழப்புகள் மிகப்பெரிய வலியை கொடுத்துள்ளன. தற்போது எந்தவித உரையாடலுக்கும் தயார் நிலை இல்லை. விரைவில் கரூர் சென்று பொதுமக்களுடன் நேரடியாகச் சந்திப்போம். அவர்களுடன் மிகப்பெரிய பயணம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா
இந்த நிலையில், சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும், இந்திய அரசியலுக்கும், பொது அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையாகவும் இருந்ததாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்காக, அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லிக்கு பயணம்
மேலும், த.வெ.க பரப்புரை கூட்டங்களில் பதிவான பேருந்து கேமரா காட்சிகளை ஒப்படைக்க கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. அதேபோல், த.வெ.க துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாருக்கும் சம்மன் வழங்கப்பட்டது. இந்த சூழலில், ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இதுதொடர்பாக விசாரித்த போது சொந்த அலுவல் பணிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க சென்று இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவுடன் சந்திப்பு
இருப்பினும், கரூர் சம்பவத்தின்போது ஏற்பட்ட பலி மற்றும் அரசியல் பரபரப்பைத் தொடர்ந்து, அவரது டெல்லி பயணம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. இந்த நிகழ்வுகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம் குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் மலையில் அவர் மூலமாகவே டெல்லி சென்றிருப்பதாகவும், விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
என்டிஏ கூட்டணி
இதுவரை அவர்களிடம் அப்பாயின்மென்ட் பெறப்படாத நிலையில் அதனை பெறுவதற்காகவே பாஜக வேட்பாளர் ஒருவரும் ஆதவ் அர்ஜுனாவுடன் சென்று இருக்கிறார். மேலும் திமுகவை எதிர்ப்பதற்கு பாஜகவின் ஆதரவு தேவை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவின் இந்த பயணம் சாதாரணமானது அல்ல தமிழக வெற்றி கழகத்தை என்டிஏ கூட்டணியை நோக்கி அழைத்துச் செல்லும் அசைன்மென்ட் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.












Click it and Unblock the Notifications