"திமுகவுக்கு இரட்டை நாக்கு.. பச்சோந்தி போல் விமர்சனம்.." போட்டுத் தாக்கும் ஜெயக்குமார்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இன்று நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த புதன்கிழமை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. கடந்த அக். மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த சில வாரங்களாக கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் அமைதியாக இருந்த தமிழ்நாடு அரசியல் களம் தற்போது மீண்டும் சூடிபிடிக்க தொடங்கியுள்ளது.
அதிமுகவில் நவநீதகிருஷ்ணனின் பதவி பறிக்கப்பட்டது ஏன்?.. விளக்கம் அளித்த ஜெயக்குமார்.. பரபர பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூட்டணி
கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணியுடன் திமுக களமிறங்குகிறது. அதேநேரம் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்துப் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. நேற்றைய தினம் அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக ஆலோசனை நடத்திய நிலையில், இன்று இரு கட்சித் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டர். அதேபோல பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதியம் 12.40 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டணி பேச்சு வார்த்தை மாலை 4 மணி வரை நடைபெற்றது.
எத்தனை இடங்கள்
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பாஜகவுடன் பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. எந்த எந்த இடங்களை வழங்குவது குறித்து தொடர்ச்சியாகப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் கட்சி நலம் பார்த்து முடிவெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
எப்போது அறிவிப்பு
பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே முடிவு எடுக்கப்படும் என்றும் விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அவர் அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், RBI அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை அளிக்காமல் இருந்தது கண்டிக்கத்தக்கது என்றாலும் கூட அவர்கள் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இரட்டை நாக்கு
இதைத் தொடர்ந்து ஆளுநர் குறித்த முரசொலி கட்டுரைக்குப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அவர், "திமுகவுக்கு இரட்டை நாக்கு, அவர்களுக்கு ஏற்றது போல் ஆளுநர் ஒத்துவராவிட்டால் பச்சோந்தி போல் விமர்சனம் செய்வார்கள். முரசொலியை திமுக காரர்களே படிக்கமாட்டார்கள் என்று கருணாநிதியே சொல்லியிருக்கிறார்" என்று கடுமையாகச் சாடி பேசினார்.