யோக்கிய சிகாமணி? அமைச்சர் பேச்சால் கொதித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்.. எச்சரித்த மாஜி அமைச்சர்!
சென்னை : எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார்.
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரத்தில் கடையில் தகராறு செய்தவர்களை சமாதானம் செய்யப்போன இப்ராஹிம் என்பவர் கொலை செய்யப்பட்டது குறித்துப் பேசினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை இல்லாமல் ஆக்குவதற்கு, குறிப்பாக போதைப் பொருட்கள், கஞ்சா போன்றவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் தேவை என்று பேசினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவர் யோக்கிய சிகாமணியா எனப் பேசினார். இதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, "விழுப்புரத்தில் நடந்த கொலை பற்றி சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது. ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டுவதுதான் எங்கள் வேலை.
யோக்கியமாக இருந்ததால் தான் இன்றைக்கு அதிமுக பொதுச்செயலாளராக வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்தால், விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications