ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல்.. பரபர ஆடியோ.. போனில் பேசியவர் ‘மிஸ்ஸிங்’ - புகழேந்தி பகீர் புகார்!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு போனில் மிரட்டல் விடுத்த சரவண பாண்டியன் என்ற அதிமுக நிர்வாகியைக் காணவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, இரு தரப்பும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த ஆர்பி உதயகுமாருக்கு போன் செய்து தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகி சரவண பாண்டியன் மிரட்டல் விடுப்பதுபோல் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது.
இந்நிலையில், அந்த ஆடியோவில் பேசிய சரவண பாண்டியனைக் காணவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஒரு வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சருக்கு போனில் மிரட்டல்
எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மகேந்திரவாடி கூட்டுறவு சங்கத் தலைவரும், தென்காசி மாவட்ட கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான சரவண பாண்டியன் என்பவர் போனில் மிரட்டல் விடுப்பதாக ஒரு ஆடியோ வெளியானது.

பரபரப்பு ஆடியோ
அந்த ஆடியோவில், பூலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்காக தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவ்வலுக்கு எப்போது வருவீர்கள் என உதயகுமாரிடம் கேட்கும் அவர், ஓபிஎஸ் தலைமையேற்றால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறினீர்கள். எங்கள் ஊருக்கு வரும் உங்களுக்கு பாடை தயாராக இருக்கிறது எனப் பேசியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சரவண பாண்டியனைக் காணவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

சங்கர பாண்டியன்
இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், "அதிமுக தென்காசி மாவட்ட கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சரவண பாண்டியன் பேசிய ஆடியோ தொடர்பாக அவர் போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து போலீசார் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அவரை அழைத்துச் சென்றது போலீசாரா அல்லது ரௌடிகளா என்பது தெரியவில்லை.

ஆர்பி உதயகுமார்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரம் தாழ்ந்து வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். நேற்று அவர் அளித்த பேட்டியில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்க்கையை முடித்து விடுவதாக பேசியிருக்கிறார். அன்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவதாக பேசி இருக்கிறார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை.

கடத்திச் செல்லப்பட்டாரா?
ஆர்பி உதயகுமார் பேசுவதை வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால், சங்கர பாண்டியனை யார் அழைத்துச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கடத்தி செல்லப்பட்டாரா என்பது புரியவில்லை. அவர் குடும்பத்தாரும் நண்பர்களும் கழகத்தினரும் அவர் எங்கே இருக்கிறார் என்று புரியாமல் தேடி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்." என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications