பாஜகவுடன் கூட்டணி பேச்சா? ஓபிஎஸ் சொன்ன அசரடிக்கும் பதில்.. குலுங்கி குலுங்கி சிரித்த வைத்திலிங்கம்!
சென்னை: ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாஜக உடனான கூட்டணி குறித்த கேள்வியின்போது குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்த சூழலில் ஓ பன்னீர்செல்வம் அணியினர் தங்கள் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைய ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக டெல்லி பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று ஓபிஎஸ் அணி மா.செக்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி கோவையில் மாநாடு நடத்த ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவோம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது மாநாடு நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது ஓபிஎஸ் அணி. இதனால், தேர்தலை நோக்கிய அரசியல் பயணத்தை ஓபிஎஸ் அணி தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் அணியினர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தேர்தல் கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தார்.

குலுங்கி குலுங்கி சிரித்த வைத்திலிங்கம்: தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு, ஓபிஎஸ், பாஜக தேசிய தலைமையுடன் தொடர்பில் இருக்கிறோம் என்றார். அப்போது வைத்திலிங்கம் குறுக்கிட்டு, நட்பு ரீதியிலான தொடர்பில் இருக்கிறோம், தேர்தல் வரும்போதுதான் கூட்டணி என்றார்.
தொடர்ந்து செய்தியாளர், நட்பு கூட்டணியாக மாற வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், "உங்கள் எண்ணம் பலிக்கட்டும்" என்றார். செய்தியாளர், சுற்றிச் சுற்றி பாஜக கூட்டணி குறித்துக் கேட்டதால் வைத்திலிங்கம் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
டம்மி போஸ்ட்: மேலும், தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இரட்டை இலை வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. வழக்கு முடிந்தவுடன் இதற்கான பதிலைச் சொல்வோம்" என்றார்.
செய்தியாளர் ஒருவர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை அதிமுக தொடர்ந்து சபையில் கேட்டு வருகின்றனரே எனக் கேட்டார். அதற்கு சட்டென குரலை உயர்த்திய ஓபிஎஸ், "அதிமுக யாரு? நாங்கதான் அதிமுக" என்றார். உடனே, புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் அணியினர் கைதட்டி உற்சாகமடைந்தனர். உடனே செய்தியாளர் எடப்பாடி தரப்பு என மாற்றிக் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், "எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பொறுப்பே அதிகாரப்பூர்வமானது கிடையாது. சபாநாயகர், விருப்பத்தின் அடிப்படையில் அளித்த பதவி. நாம் என்ன சொன்னாலும், சபாநாயகர் சொல்வதுதான் இறுதியானது. எப்படி, துணை முதலமைச்சர் பொறுப்பு எந்தவித அதிகாரமும் இல்லாததோ, அது போலத்தான் இதுவும். துணை முதலமைச்சர் என்பது ஒரு டம்மி போஸ்ட். துணை முதலமைச்சர் எந்த வித அரசாணையும் போட முடியாது. துணை முதல்வர் பொறுப்பு என்பது சும்மா பெயருக்கு. அதிகாரம் இல்லாத பதவி அது." என்றார்.












Click it and Unblock the Notifications