அடுத்த பரபரப்பு! அதிமுக தலைமை அலுவலகம் சாவி வழக்கு.. ஓபிஎஸ் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரணை!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
Recommended Video
அதிமுக கட்சியில் பதவி சண்டை ஏற்பட்டது. ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த நிலையில் ஒற்றை தலைமை எனும் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதையடுத்து ஜூன் 23ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் அவமானப்படுத்தப்பட்டார். மேலும் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.

அதிமுக அலுவலகத்தில் மோதல்
இதில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஜூலை 11ல் சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்த நிலையில் அவர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அலுவலகத்துக்கு சீல்
இதையடுத்து வட்டாச்சியர் சார்பில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பித்தது.

எடப்பாடி பழனிச்சாமியிடம் சாவி ஒப்படைப்பு
சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 20ல் பிறப்பித்த உத்தரவில், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்கும்படி கூறப்பட்டு இருந்தது. அதோடு ஒருமாதம் வரை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்ககூடாது என நீதிமன்றம் கூறியது. அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிச்சாமி வசம் சென்றது ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை
இந்நிலையில் தான் அதிமுக தலைமை அலுவலகத்தில் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

பொதுக்குழு செல்லாது என்ற நீதிமன்றம்
அதிமுக கட்சியில் அதிகாரத்தை கைப்பற்றும் விவகாரத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே பெரும் போட்டி உள்ளது. இதையடுத்து ஜூலை 11 பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்ப்பட்டார். இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் பரபரப்பு
இந்த தீர்ப்பின் மூலம் ஓ பன்னீர் செல்வம் தரப்பு உற்சாகமடைந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என கூறப்படும் நிலையில் தான் அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரத்தில் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் அதிமுக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications