அதிமுக vs பாஜக.. யார் பிரதான எதிர்க்கட்சி?.. முற்றும் மோதல்.. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் சுளீர் பதிலடி
சென்னை: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. இதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அ.தி.மு.க இழந்தது. அ.தி.மு.க எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
Exclusive; இன்னும் 5 நாட்கள்தான் இருக்கு.. புதிர் போட்டு பேசிய தமிழ்நாடு வெதர்மேன்.. என்ன நடக்கும்?
தமிழக எதிர்கட்சி தலைவராக அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சி துணைத் தலைவராக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வமும் உள்ளனர்.
அண்ணாமலை கருத்து
கடந்த சில வாரங்களாக பா.ஜ.க.தான் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியாக உள்ளது என்று தகவல்கள் பரவி வருகின்றன. சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, '' தமிழகத்தின் எதிர்க்கட்சிபோல் பா.ஜ.க செய்லபட்டு வருகிறது'' என்று வெளிப்படையாக பேசினார். சில பாஜக தலைவர்களும் இதனையே கூறியதால் அ.தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அ.தி.மு.க பதிலடி
பா.ஜ.க.வினரின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க தரப்பில் தற்போது பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மிண்ட் தங்கசாலை பகுதியில் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ''அ.தி..மு.க எடுக்கக்கூடிய அனைத்து செயல்களையும் பா.ஜ.க முன்னெடுத்துசென்று பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளதே'' என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அ.தி.மு.க மாபெரும் இயக்கம்
இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் கூறியதாவது:- இது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டு. இன்றைக்கு ஊடகம் உள்ளது. ஊடகத்துக்குத் தெரியும் நாங்கள் எந்த அளவுக்கு மக்கள் பிரச்சனை குறித்துப் போராடுகிறோம் என்று. உதாரணத்திற்கு ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று சொல்லி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தது எந்த இயக்கம். அதிமுக எனும் மாபெரும் இயக்கம்.
பிரதான எதிர்க்கட்சி நாங்கள்தான்
அதுபோல முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம். அதுபோல போராட வேண்டிய இடத்தில் போராடுகிறோம். அதுபோல எதிர்ப்புக் குரல் தெரிவிக்கிறோம். ஒட்டுமொத்தமாக ஒரு மாயையை செயற்கையாக உருவாக்க நினைக்கிறார்கள். அது முடியாத காரியம். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி உருவாக்கி கட்டிக்காத்த இந்த இயக்கம், ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம். இதில் யார் பிரதான எதிர்க்கட்சி?
நாளைக்கு ஆளும் கட்சி
அவரவர்கள் கட்சியை வளர்ப்பதற்கு அவரவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இது அவர்களுடைய விருப்பம். கம்யூனிச கட்சிகூட போராட்டம் செய்கிறது. அதனால் அவர்கள் பெரிய அளவுக்கு வளர்ந்துவிட்டார்களா. வளர்ச்சி என்பது மக்கள் தீர்மானிப்பது. எங்களைப் பொறுத்தவரையில் மக்களுக்கு எதிரான போக்கை அரசு கடைப்பிடிக்கும்போது வீதிக்கு வந்து போராடுவதும், மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதும் கழகம்தான். இன்றைக்குப் பிரதான எதிர்க்கட்சி. நாளைக்கு ஆளும்கட்சி. இதுதான் நடக்கும். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.