அவர் கையெழுத்து இல்லையே.. அப்போ அந்த பிரச்சனை தானா? எடப்பாடி ஓகே சொல்லல.. ஓபிஎஸ் தனியா - அதிமுக பரபர
சென்னை : தமிழகத்தில் யார் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படுவது என்பதில் அதிமுக, பாஜக இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன.
அதிமுகவின் சீனியர் தலைவர்கள் எழுப்பிய பிரச்சனை தீயாகப் பற்றிய நிலையில், பாஜகவினரும், அதிமுகவினரும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று, சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவது அதிமுகதான் என கட் அண்ட் ரைட்டாக தெரிவித்துள்ளார்.
அதிமுக, பாஜக ஓரமா போங்க.. “உண்மையான எதிர்க்கட்சி பாமக தான்” - ஒரே போடாக போட்ட அன்புமணி ராமதாஸ்!
முந்த முயன்ற பாஜக
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஓராண்டு காலத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சிறப்பாகப் பணியாற்றவில்லை என விமர்சிக்கப்பட்டு வந்தது. பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு திமுக அரசுக்கு எதிராக தினந்தோறும் கருத்துகளை தெரிவித்து லைம்லைட்டிலேயே இருந்து கொண்டிருக்கிறார். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனச் செய்து பாஜகவை பிரதான எதிர்க்கட்சி போல நடத்திக் கொண்டிருப்பதாகவும், அவருடன் ஒப்பிடும்போது அதிமுக தலைவர்கள் சுணங்கிவிட்டதாகவும் அரசியல் வட்டாரத்திலேயே பேச்சுகள் எழுந்தன.
விட முடியாது
கடந்த 10 ஆண்டுகாலமாக ஆளுங்கட்சியாக இருந்துவிட்டு இந்த முறை ஆட்சியை பறிகொடுத்திருக்கும் நேரத்தில், இந்தப் பேச்சுகள் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தின. இது தலைமைக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. தொண்டர்களின் அதிருப்தியைக் களைந்து சுறுசுறுப்பு ஏற்படுத்தும் வண்ணம் இனி தொடர்ந்து போராட்டங்கள், கருத்துகள் என களத்திலேயே இருக்க வேண்டும் என அதிமுகவின் இரட்டை தலைமையான ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முடிவெடுத்துள்ளனர்.
பொன்னையன் கொளுத்திய வெடி
சமீபத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்ட, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கும், அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல என்றும், பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கூட்டணி கட்சியான பாஜக பற்றி பொன்னையன் இப்படி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கருத்து மோதல்
இதைத்தொடர்ந்து பா.ஜ.கவின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தமிழகத்தின் எதிர்க்கட்சியாக அதிமுக சரிவர செயல்படவில்லை. பாஜகதான் அன்றாடம் ஆளும் திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறது என்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், பொன்னையனின் பேச்சு குறித்த கேள்விக்கு அது அவரது தனிப்பட்ட கருத்து என்கிற ரீதியிலேயே பதிலளித்து வந்தார். எனினும், இந்த மோதல் காரணமாக பாஜக - அதிமுக கூட்டணியில் சலசலப்பு நிலவி வருகிறது.
ஓயாத எதிர்க்கட்சி பேச்சு
இதனால் கடந்த சில வாரங்களாகவே எதிர்க்கட்சி யார் என்பதை நிறுவுவதுதான் இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் பேச்சாக இருக்கிறது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், கடந்த ஓராண்டு காலமாக சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலும் சிறந்த எதிர்க்கட்சியாக அதிமுக செயலாற்றி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் செயல்பாடுகளில் அதிமுக பின்தங்கி இருப்பது போன்ற மாயத்தோற்றம் சமீப காலமாக உருவாக்கப்பட்டு வருவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு பதிலடி
மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகள் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணும் இயக்கமாக அதிமுக உள்ளது. மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்காக பல முறை பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாக அறிக்கையில் ஓபிஎஸ் கூறியுள்ளார். மக்களின் பிரச்சனைகளை சுட்டிக் காட்டி பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜகதான் எதிர்க்கட்சியாக செயலாற்றி வருவதாக அக்கட்சியினர் கூறி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிக்கை அவர்களுக்கு பதிலடியாகவே கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய கேள்வி
அதேநேரம், இன்னொரு முக்கியமான கேள்வியும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது. அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என்ற பாஜகவிற்கான பதிலடி அறிக்கையை ஏன் ஓ.பி.எஸ் மட்டும் தனியாக வெளியிட்டுள்ளார் என்றும், இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்தே இந்தக் கருத்தை தெரிவித்திருந்தால் பாஜகவுக்கு எதிரான பகிரங்க அறைகூவலாக இருந்திருக்குமே என்றும், இந்த விஷயத்தில் இரு தலைமைக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லையோ என்கின்ற கேள்வியை அவர்கள் முன்வைக்கிறார்கள்.
காரணம் இருக்கு
பா.ஜ.க தான் பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்ற விவாதங்கள் தொடங்கியதில் இருந்தே எடப்பாடி பழனிசாமி ஆத்திரமடைந்து பேசி வந்தாலும் கூட, பா.ஜ.கவை நேருக்கு நேராக விமர்சிப்பதில் தயக்கம் காட்டி வருகிறார். அதிமுகவுக்குள் புரட்சிக் கோஷங்கள் கிளம்பிடிருக்கும் சூழலில் இரு தலைமையும் சேர்ந்து, 'எதிர்க்கட்சி அதிமுகதான்' என அறிவிக்க வேண்டும் என்பது சீனியர்களின் யோசனையாக இருந்தது. ஆனால் அதற்கு பிடி கொடுக்காமல் எடப்பாடி தள்ளிப் போட்டு வந்துள்ளார். இந்நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனியாகவே தனது கருத்தை ஓப்பனாக சொல்லி விட்டார் என்கிறார்கள்.
இதுதான் நடைமுறை
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் தரப்பில் கேட்டால், கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கும், உட்கட்சி நடவடிக்கைகள் தொடர்பாகவும் தான் இருவரும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிடுவார்கள். மற்ற விஷயங்களில் இருவரும் தனித்தனியாக அவரவர் பெயரில் அறிக்கை வெளியிடும் நடைமுறைதான் இருந்து வருகிறது. பா.ஜ.கவிற்கு எதிரான நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்கிறார்கள்.
மா.செக்கள் கூட்டத்தில்
இந்நிலையில், ஜூன் 23ல் நடைபெறும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக ஜூன் 14-ஆம் தேதி, தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி பிரச்சனை உள்ளிட்ட பல விஷயங்கள் சூடாக விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.