தேநீர் கடைக்காரர் ஒருங்கிணைப்பாளர்! விவசாயி இணை ஒருங்கிணைப்பாளர்! டிரைவர் அவைத்தலைவர்! அடடே அதிமுக!
சென்னை: அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்ததன் மூலம் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் புதிய பூஸ்ட் கொடுத்திருக்கிறது அக்கட்சியின் தலைமை.
அதிமுகவில் எளியோரும் ஏற்றம் பெற முடியும் என்ற முழக்கத்தை அக்கட்சியின் ஐடி விங் நிர்வாகிகள் சமூகவலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
இதனிடையே சசிகலா ஆதரவு, ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். ஆதரவு என்ற இரட்டை நிலைப்பாட்டுடன் காலத்தை கடத்தி வரும் பலரும் இனி ஒற்றை நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
அதிமுக
அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதணன் அண்மையில் காலமானதை அடுத்து அப்பதவியை கைப்பற்ற முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, ஜெயக்குமார் உள்ளிட்ட இன்னும் சில முக்கிய நிர்வாகிகள் காய்நகர்த்தி வந்தனர். மேற்கண்ட இவர்களில் ஒருவருக்கு தான் அவைத் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் என ஆருடங்கள் கூட கூறப்பட்டு வந்தன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழ்மகன் உசேனை அதிமுக அவைத்தலைவராக நியமித்து வியப்பை ஏற்படுத்தினார்கள் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும்.
ஐ.டி.விங்
இந்நிலையில் இந்த நிகழ்வை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள அதிமுக ஐடி விங் நிர்வாகிகள், டீக்கடை நடத்தியவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர், விவசாயி இணை ஒருங்கிணைப்பாளர், ஓட்டுநராக இருந்தவர் அவைத்தலைவர் எனக் குறிப்பிட்டு இது போன்ற ஒரு வாய்ப்பு தமிழகத்தின் வேறு எந்தக் கட்சியிலாவது கிடைக்குமா என கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
சசிகலா எதிர்ப்பு
இதனிடையே மதில்மேல் பூனையாக சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுக்கலாமா இல்லை ஒ.பி.எஸ்.-இ.பி.எஸ்.தலைமையையே ஏற்கலாமா என இரண்டு நிலைப்பாட்டுடன் இருந்த பலரும், நேற்றைய நிகழ்வுக்கு பிறகு தெளிவான ஒரு முடிவை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சசிகலா தரப்பு முன்னெடுக்கும் முயற்சி பின்னடைவை சந்திக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
எம்.ஜி.ஆர். காலம்
அதிமுகவில் அதிர்ஷடம் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம் என்பது இன்று நேற்றல்ல எம்.ஜி.ஆர்.காலம் தொட்டே நடைமுறையில் உள்ள வழக்கமாகும். எம்.ஜி.ஆரால் ஏராளமான இளைஞர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பல பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள் என்பது வரலாறு. திருநாவுக்கரசர், முத்துச்சாமி, போன்றோர் எல்லாம் அமைச்சர், துணை சபாநாயகர் என்ற பதவிகளில் அமர்ந்த போது அவர்களுக்கு வயது 30-க்கும் கீழ் மட்டுமே.
உட்கட்சி அரசியல்
இதேபாணியை தான் ஜெயலலிதாவும் பின்பற்றினார். சாமானிய தொண்டனையும் தமிழக அரசியல் சரித்திரத்தில் இடம்பிடிக்க வைப்பார். இன்று அவர்கள் இருவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட சொல்லிக்கொள்ளும் வகையிலாவது அதிமுகவில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் உட்கட்சி அரசியலில் கடும் புயல் வீசி வரும் வேளையிலும் அதிமுக இந்தளவுக்கு தாங்கி நிற்கிறது.