அடுத்தடுத்து விபத்து.. ஒரு பலி.. ஒரு காயம்.. காரணம் ஜெ. ஆன்மாவா.. அலறும் அதிமுக
Recommended Video

சென்னை: அதிமுக கூட்டணி ஏறத்தாழ முடிவாகி பாமகவுக்கு எத்தனை தொகுதிகள், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்றெல்லாம் கூட அறிவித்து விட்டார்கள். அதன் பிறகு அடுத்தடுத்து நடைபெற்ற இரு விபத்துகள் அதில் சிக்கிய இரு எம்.பிக்கள் இவற்றினால் அதிமுக கூடாரம் ஆடிப்போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மகம் நட்சரத்தில் பிறந்தவர் என்பதால் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் அவரது பிறந்த நாளாகவும் வருகிறது. ஆகவே அன்றைய தினம் அதிமுகவினருக்கு அதி முக்கியமான நாள். அவர் உயிருடன் இருக்கும்போதே இந்த நாளில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட ஜெயலலிதா தனது பிறந்தநாளான பிப்ரவரி 24 ம் தேதியன்றே வேட்பாளர்களை அறிவித்தார்.
எதற்கெடுத்தாலும் ஜோதிடத்தை நம்பும் அதிமுகவினரும் இந்த நாளை மிக முக்கியமான நாளாகவே கருதுகின்றனர். ஆகவேதான் மாசி மாதமான இந்த மாதத்தில் மகம் நட்சத்திரம் வந்த அன்று அதாவது நட்சத்திரப் படி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று பாமகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி என்பதை உறுதி செய்தது அதிமுக. இந்த கூட்டணி உறுதி செய்ததில் எடப்பாடி ராஜதந்திரியாகவே பார்க்கப்பட்டாலும் இப்போது நடைபெறும் விபத்துகள் அதில் அதிமுக எம்பிக்கள் சிக்கியது இதெல்லாம் அதிமுகவினரை ஆச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஜெயலலிதாவுக்கு பிடிக்காத பாமகவுடனும் பாஜகவுடனும் கூட்டணி வைத்தது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு இவை பிடிக்காததால் இப்படி விபத்துகள் நடைபெறுகிறது என்று அதிமுக நம்ப ஆரம்பித்துள்ளது.

தாறுமாறான சம்பவங்கள்
இப்போது நடைபெறுகிற சம்பவங்களை குறித்து பேசுவதற்கு முன்னர் சில சம்பவங்களை இந்த நேரத்தில் சற்று பின்னோக்கி பார்ப்பது அவசியமாகிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ம் தேதி கொடநாடு பங்களாவில் வேலை பார்த்து வந்த ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். இன்னொரு காவலாளி கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தார். இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் அடுத்த சில நாட்களிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இரண்டாவது குற்றவாளி சயான் கார் விபத்தில் சிக்கியதில் அவரது மனைவியும் குழந்தையும் உயிரிழந்தனர். அவர் மயிரிழையில் தப்பித்து பெரும் போராட்டத்திற்கு பின்னர் குணமாகி வந்தார்,

சயான் விவகாரம்
சயான் பின்னர் எடப்பாடிக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தது எல்லாம் தனிக்கதை. இப்படியாக கொடநாட்டில் அடுத்தடுத்து நடந்த கொலைகள், விபத்துகளுக்கு காரணம் ஜெயலலிதாவுக்கு துரோகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக ஜெயலலிதாவின் ஆன்மா பழிவாங்குகிறது என்று கூறப்பட்டது. ஜெயலலிதா இறந்தபிறகு அவருடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த சசிகலாவின் குடும்பத்தில் சில துர் மரணங்கள் கூட ஜெயலலிதாவின் ஆன்மாவால்தான் நடைபெற்றது என்ற பேச்சும் அப்போது அதிமுக வட்டாரத்தில் நிலவியது. அதோடு ஜெயலலிதாவின் ஆன்மா இன்னமும் அவரது சமாதி அருகே இருப்பதாக கூட கூறப்பட்டது. சமாதி அருகே காவல் பணியில் இருந்த காவலர்களுக்கு கூட உடல் நிலை சரியில்லாமல் போனது என்றெல்லாம் பல நிகழ்வுகள் உண்டு.

ஜெ. நினைவகம்
இந்த நிலையில் ஜெயலலிதாவை குற்றவாளி என்றும் அவருக்கு நினைவகம் கட்டுவதை கடுமையாக எதிர்த்த பாமகவுடன் கூட்டணி வைத்ததை அதிமுக தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சிக்குள்ளேயே கடும் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்து வந்தன. அதோடு அம்மாவுக்கு பிடிக்காதவர்களோடு கூட்டணி வைத்ததை அம்மாவின் ஆன்மா சும்மா விடாது என்று சாபமும் விட்டனர். இதற்கேற்றார் போல வருவாய்த்துறை அமைச்சர் ஆர்,பி.உதயகுமாரும் எடப்பாடிக்குள் அம்மாவின் ஆன்மா புகுந்துள்ளதாக கூறி பற்ற வைத்திருந்தார்.

தலைவர்கள் கிலி
இப்போது இரண்டு நாட்களாக நடைபெற்ற விபத்துகளும் அதை மெய்பிப்பது போலவே உள்ளதாக அதிமுக தலைவர்கள் கிலியடித்து போயுள்ளனர். அதிமுக பாமக கூட்டணி அமைந்ததையடுத்து ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு அதிமுகவினருக்கு விருந்து கொடுக்கப்பட்டது. இந்த விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதில் விழுப்புரம் தொகுதி எம்.பி ராஜேந்திரனும் கலந்து கொண்டார். விருந்துக்கு பின்னர் திண்டிவனம் ஜாக்காம்பேட்டையில் இருந்து சனிக்கிழமை காலை சென்னைக்கு கிளம்பியவர் திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறிந்ததுமே அதிமுக தலைமை பலத்த அதிர்ச்சியடைந்தது. கூட்டணி முடிவாகி நடைபெற்ற முதல் விருந்து நிகழ்விலேயே இந்த விபத்தா என தலைவர்களும் தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

ஜெ.வுக்குப் பிடிக்கலையோ
இந்த விபத்து நடந்த அடுத்த நாளிலேயே அதாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் சேலத்தில் நடைபெற இருந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்காக கள்ளக்குறிச்சி எம்.பி காமராஜ் தனது காரில் வந்துள்ளார். அவரது காரும் சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணம் அருகே வந்தபோது டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த எம்.பி. காமராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இப்படியாக இரு நாட்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற விபத்துகளிலும் இரு சிட்டிங் எம்.பிக்கள் சிக்கிக்கொண்ட சம்பவம் அதிமுக தலைமைக்கு பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அதிமுக அமைத்துள்ள கூட்டணி அம்மாவின் ஆன்மாவுக்கு பிடிக்கவில்லையோ என்று குழம்பி போயுள்ளனராம். இது பாமக வட்டாரத்தையும் கவலை கொள்ள செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications