ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த மாண்டஸ்.. இப்போ எங்க இருக்கு? எந்த மாவட்டங்களுக்கு மழை?
சென்னை: வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை சென்னையையொட்டி கரையை கடந்த நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட உள் மாவட்டங்களை வழியாக அரபிக் கடலுக்கு நகர்ந்துகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 6-7 தேதிகளில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்தது.
இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்ட நிலையில் இது 9ம் தேதி நள்ளிரவு தொடங்கி 10ம் தேதி அதிகாலையில் தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டது.

புயல்
பின்னர் மாமல்லபுரத்திற்கும், பழவேற்காடுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. இதனையடுத்து நேரம் செல்ல செல்ல சென்னைக்கு அருகே புயல் கரையை கடக்கும் என்று துல்லியமாக கணிக்கப்பட்டது. இதனையடுத்து சேதங்களை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. வானிலை ஆய்வு மையம் கணித்ததைப் போலவே இரவு முதல் பலத்த காற்று வீசத் தொடங்கியது. இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. அதேபோல மக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. தயார் நிலையில் இருந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தினர்.
நகர்வு
இதனையடுத்து, நள்ளிரவில் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் தொடங்கியது. புயலின் கண் பகுதி கரையை கடந்த போது காற்று அதிகமாக வீசவில்லையென்றாலும், அதனுடைய வால் பகுதி கடக்கும்போது காற்றின் வேகம் அதிகரித்தது. குறிப்பாக நுங்கம்பாக்கத்தில் 70 கி.மீ வேகத்தில் காற்று விட்டு விட்டு அடித்தது. அதேபோல மீனம்பாக்கத்தில் 60 கி.மீ வேகத்திலும், திருத்தணியில் 56 கி.மீ வேகத்திலும் காற்று விட்டு விட்டு அடித்தது. எண்ணூரை பொறுத்த அளவில் 56 கி.மீ என்கிற அளவில் நிலையான வேகத்தில் காற்று அடிக்கத்தொடங்கியது. புயல் முழுமையாக கரைய கடக்க அதிகாலை 4 மணி வரை எடுத்துக்கொண்டது. இதனையடுத்து காலை 7 மணி நிலவரப்படி புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரக்கோணத்திற்கு அருகில் நிலைகொண்டிருக்கிறது. மேலும், இது சீரான வேகத்தில் மேற்கு திசை நோக்கி அரபிக் கடலுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications