வருமான வரி வழக்கில் இருந்து ரஜினி தப்பியது எப்படி? 6 ஆண்டு பிளாஷ்பேக்! காப்பாற்றிய அந்த சட்டம்!
சென்னை: புலி திரைப்படத்திற்காக வாங்கப்பட்ட ஊதியத்தில் ரூ 15 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு அபராதம் விதித்திருந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இது போன்று அபராதம் விதிக்கப்பட்டு அதில் இருந்து தப்பியது எப்படி என்பதை பார்க்கலாம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது புலி படத்திற்காக அவர் வாங்கிய ஊதியத்தில் ரூ 15 கோடியை விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக கண்டறியப்பட்டது.

விஜய் தனது வருமானத்தை மறைத்ததாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி விஜய்க்கு ரூ 1.50 கோடியை வருமான வரித் துறை அபராதமாக விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது விஜய்க்கு ரூ 1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித் துறையின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு இந்த ஆண்டு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ராமலிங்கம், இன்று தீர்ப்பை வாசித்தார். அதில் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதும், ஏற்கெனவே உயர்நீதிமன்றம் விதித்த ரூ 1.50 கோடி அபராதம் செல்லும் என தீர்ப்பளித்தார்.
மேலும் விஜய் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை நாட நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில் ஒன்று அவர் தீர்ப்பாயத்தை நாடலாம், இல்லாவிட்டால் அபராதம் செலுத்துவது என இரு ஆப்ஷன்தான் இருக்கிறது.
இதே போன்று ரஜினிகாந்தும் வருமான வரித் துறை வழக்கில் சிக்கினார். அவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அந்த அபராத உத்தரவை வருமான வரித் துறையே திரும்ப பெற்றது. இது எப்படி என்பதை பார்க்கலாம்.
நடிகர் ரஜினிகாந்த் 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டங்களில் வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என கூறி ரூ 66 லட்சத்து 22 ஆயிரத்து 436 அபராதம் விதித்து வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி நடிகர் ரஜினிகாந்த் வருமான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ரஜினிக்கு அபராதம் விதித்த உத்தரவை தீர்ப்பாயம் ரத்து செய்தது. இதை எதிர்த்து வருமான வரித் துறை சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது வருமான வரித் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஜினிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தார். இதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. ரஜினிக்கு எதிரான வழக்கு திரும்ப பெறப்பட்டது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதாவது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கடந்த 2019 ஆகஸ்ட் 8 அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், ரூ. 1 கோடிக்கும் குறைவான அபராதத் தொகைக்கு வழக்கு தொடருவதில்லை என்ற கொள்கை முடிவால்தான் அவர் அந்த வழக்கிலிருந்து தப்பினார். அதாவது இது போன்று ரூ 1 கோடிக்கு குறைவான அபராதத்திற்காக நிறைய வழக்குகள் நீதிமன்றத்தில் தேங்குவதால் வருமான வரித் துறை இப்படி ஒரு முடிவை எடுத்தது.
எனினும் வருமான வரிச் சட்டம் 271(1)(C)-படி, யாராவது வருமானத்தை மறைத்தாலோ, அல்லது தவறான தகவல்களை சொன்னாலோ அவர்கள் செலுத்த வேண்டிய வரியில் 300 சதவீதம் வரை அபராதமாக விதிக்க முடியும். ஒரு வேளை இந்த சட்டத்தின்படி ரஜினிக்கு வருமான வரித் துறை 300 சதவீத வரி விதித்திருந்தால் 1 கோடியே 98 லட்சத்து அறுபத்து ஏழாயிரத்து முன்னூற்றி 8 ரூபாயை செலுத்த வேண்டியிருந்திருக்கும். 1 கோடிக்கு மேல் அபராதத் தொகை வருவதால் ரஜினிகாந்த் இந்த வழக்கை கோர்ட்டில் சந்தித்திருக்கக் கூடும். எனவே ரஜினிகாந்த் தப்பியது அந்த வருமான வரி சட்டத்தின் பிரிவை வைத்துதான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications