அக்னிபாத்: உங்களுக்கெல்லாம் இடமே இல்லை! ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சு ப சிதம்பரம் கடும் எதிர்ப்பு
சென்னை: அக்னிபாத் திட்டத்துக்கு ஆதரவாக ஆளுநர் ஆர்என் ரவி பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ப சிதம்பரம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒரு மாநில ஆளுநர் பங்கேற்பதற்கு இடம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முப்படைகளில் ஆள்சேர்ப்புக்கா அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அக்னிபாத் போராட்டங்கள்
வட மாநிலங்களில் பல ரயில் நிலையங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்பதற்காக அக்னிவீரராக 4 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மத்திய பாதுகாப்பு துறையின் பொது நிறுவனங்கள், மத்திய உள்துறையின் பாதுகாப்பு பிரிவில் 10 சதவீதம் பணி இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபாத் ஆளுநர் ஆதரவு
இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் உள்பட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை காட்டி வருகின்றன. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று தூத்துக்குடியில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் அக்னிபாத் திட்டம் பற்றி பேசினார். அவர் பேசுகையில், ‛‛அக்னிபாத் புரட்சிகரமான திட்டம். 17 வய மாணவர்கள் அக்னிபாத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இது வரேவற்கத்தக்கது.

இளைஞர்களுக்கு பயனுள்ள திட்டம்
இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயனளிக்கும் திட்டம் தான் இது. சிறப்பான அக்னிபாத் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு இளைஞர்கள் பொது சொத்துகளை சேதப்படுத்துகின்றனர். அக்னிபாத் திட்டத்தில் சேருவோருக்கு 4 ஆண்டு முடிவில் ரூ.12 லட்சம் கொடுக்கப்படுகிறது. 21 வயதில் இளைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இத்திட்டம் உதவும். மேலும் இதில் சேவை செய்தவர்களுக்கு அரசு, தனியார் துறையிலும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கம். இது இளைஞர்களின் தன்னம்பிக்கையையும், சுய ஒழுக்கத்தையம் மேம்படுத்தும்'' என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசியிருந்தார்.

ப சிதம்பரம் கடும் கண்டனம்
இந்நிலையில் ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான ப சிதம்பரம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛ அக்னிபாத் திட்டம் என்பது ஓர் அரசியல் முடிவு. இன்று சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சனையாக உருவாகிவிட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுநர் கருத்து தெரிவிப்பது ஏற்புடையதல்ல.

இடமே இல்லை
மேலும், உள்நாட்டு சக்திகளும், வெளிநாட்டு சக்திகளும் இளைஞர்களுக்கு தவறான வழியை காட்டுகிறார்கள் என்று சொல்வது அறவே ஏற்புடையதல்ல. இந்த பிரச்சனைக்கு அமைதியான போராட்டம் மூலமாகவும், விரிவான விவாதம் மூலமாகவும் தான் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் ஒரு மாநில ஆளுநர் பங்கேற்பதற்கு இடம் இல்லை'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications