இன்றே காலியாகும் சென்னை.. 5 கிமீ அணிவகுத்த வாகனங்கள்.. முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்றே ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் புறப்பட்டு செல்கின்றனர். இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்துள்ளன.
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாடை, பட்டாசு வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த முறை தீபாவளி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சனி, ஞாயிறுடன் சேர்ந்து திங்கட்கிழமை என்று 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் பொதுமக்கள் நாளைய தினம் சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட பிற மாவட்டங்களில் உள்ள ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையே தான் சென்னையில் வசிக்கும் மக்களில் ஒரு பகுதியினர் இன்று இரவை தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். நாளைய தினம் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து புறப்படுவார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதில் இருந்து தப்பிக்கும் வகையில் ஏராளமானவர்கள் இன்று இரவே சென்னையில் இருந்து கார் உள்பட பிற வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
இதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு - மதுரவாயல், தாம்பரம் புறவழி சாலை, ஜிஎஸ்டி ரோடு உள்பட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கின்றனர். குறிப்பாக கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
அதாவது கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம். திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதனால் இன்று அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக பணியை முடித்து அலுவலகத்தில் இருந்து இரவில் வீடு திரும்பியவர்கள் கடும் அவதியடைந்தனர். அதேபோல் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டவர்களும் போக்குவரத்து நெரிசலால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
அதேபோல் மதுரவாயல் - வானரகம் சுங்கச்சாவடி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications