பாமகவின் வன்னியர் உள்ஒதுக்கீடு கோரிக்கை ஓகே... தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் மும்முர பேச்சு
சென்னை: பாமகவின் வன்னியருக்கான உள்ஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தற்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள்தான் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இடம்பெற்றுள்ளன. தேமுதிக இடம்பெறுமா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.
வன்னியர் இடஒதுக்கீடு
அதிமுக அணியில் பாமக, பெரிய கட்சியாக கருதுகிறது. மேலும் வன்னியர்களுக்கு 20% ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தும் போராட்டம் நடத்தியது.
அதிமுக- பாமக பேச்சுவார்த்தை
பாமகவின் இந்த கோரிக்கை, போராட்டங்களை தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் குழு பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதனடிப்படையில் எம்பிசி கோட்டாவில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு தரலாம் என இணக்கம் காட்டப்பட்டது. இதனை உடனே நிறைவேற்ற பாமக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இட ஒதுக்கீடு விவகாரம்
ஆனால் நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டி வன்னியருக்கான உள்ஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக ஏற்றுக் கொள்கிறது; தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை பாமக ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடியாரை டாக்டர் ராமதாஸ் சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.
அதிமுக-பாமக தொகுதி பங்கீடு
இந்த நிலையில் அதிமுக-பாமக இடையே அடுத்த கட்டமாக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பாமக தரப்பில், அதிமுக அணியில் தங்களுக்கே அதிக இடங்கள் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளது. 40 தொகுதிகளில் தொடங்கி இருக்கிறது இந்த பேச்சுவார்த்தை. அதிமுக தரப்பில் 25-ல் இருந்து 30 தொகுதிகளுக்குள் ஒதுக்குவது என கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாம்.