பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி
சென்னை: அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது எம்எல்ஏவாக இருக்கும் கே.வி.குப்பம் தொகுதியே அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புரட்சி பாரதம், வட தமிழகத்தில் குறிப்பாகத் தலித் மக்களின் வாக்குகளைக் கவர அதிமுகவுக்குப் பெரும் துணையாக இருந்து வருகிறது.

அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வந்த ஜெகன்மூர்த்தி கட்சி இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டிருந்தது. குறைந்தபட்சம் 2 தொகுதிகளையாவது ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டிருந்தது. ஆனால் இக்கட்சிக்கு ஒன்றுதான் ஒதுக்கப்படும் என அதிமுக கண்டிப்பாக தெரிவித்துவிட்டது.
இதையடுத்து தவெகவுக்கு செல்லலாமா இல்லை திமுக கூட்டணியில் இணையலாமா என புரட்சி பாரதம் யோசனை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய தினம் புரட்சி பாரதம் கட்சியினர் ஆலோசனை நடத்தியிருந்தனர்.
அதில் அதிமுக கூட்டணியிலேயே நீடிக்கலாம் என பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனராம். இதனால் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமியை பூவை ஜெகன்மூர்த்தி நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது அக்கட்சிக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட கே.வி.குப்பம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக சொல்லப்பட்டது. இதுகுறித்து ஜெகன்மூர்த்தி கூறியிருப்பதாவது: கூடுதல் தொகுதிகளை கேட்டிருந்தோம்.
"இப்போதைக்கு ஒரு தொகுதியில் நில்லுங்கள், நம் ஆட்சிதான் அமைய போகிறது. புரட்சி பாரதத்தை நாங்கள் என்றும் கைவிடமாட்டோம்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதனால் இந்த ஒரு தொகுதிக்கு ஒப்புக் கொண்டுள்ளோம். கே.வி. குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறோம். தனி சின்னம் என்றால் தற்போது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க இயலாது என்பதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டி என ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தற்போது கே.வி. குப்பம் தொகுதியில் பூவை ஜெகன்மூர்த்திக்குப் பலமான செல்வாக்கு இருப்பதால், மீண்டும் அதே தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications