அதிமுகவை என் உயிரில் இருந்து பிரிக்க முடியாது... சசிகலா பேச்சில் இருந்த விசயத்தை கவனிச்சீங்களா
அண்ணா திமுகவிற்காக அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம். அதை என் உயிரில் இருந்தே பிரிக்க முடியாது என்று காரைக்குடியைச் சேர்ந்த தொண்டரிடம் பேசியுள்ளார் சசிகலா.
சென்னை: அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய சசிகலா தற்போது தினம் தினம் ஒவ்வொரு ஆடியோவாக ரிலீஸ் செய்து வருகிறார். இன்று ஒரு தகவல் போல தற்போது 23வது ஆடியோ வெளியாகி உள்ளது. அதிமுக நான் பாடுபட்டு வளர்த்த கட்சி அதனை என் உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்று முதன் முறையாக கட்சியின் பெயரை கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா, கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவினர் சின்னம்மாவாக வலம் வந்தார். அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்ட கையோடு முதல்வராகவும் ஆசைப்பட்டார்.
அரசாள ஆசை இருந்தாலும் அதிர்ஷ்டம் என்னவோ சிறைக்குப்போகத்தான் இருந்தது. 2017ஆம் தேதி பிப்ரவரி மாதத்தில் சிறைக்குப் போன சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை திரும்பினார்.

ஏமாந்த தொண்டர்கள்
பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும் சசிகலா அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக ஆன்மீக பயணம் சென்ற நேரத்தில் அமமுக தொண்டர்கள் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர். ஆனால் எந்த வித பதிலும் சொல்லாமல் கிளம்பிப்போனார் சசிகலா.

தினம் தினம் ஆடியோ
அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய சசிகலா தினம் தினம் ஒரு ஆடியோவை வெளியிட்டு வருகிறார். சசிகலா அதிமுகவிலேயே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமி, சிவி. சண்முகம், கே.சி வீரமணி ஆகியோர் கூறி வருகின்றனர்.

அதிமுக பெயரை சொன்ன சசிகலா
இந்நிலையில், காரைகுடியை சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் சசிகலா பேசும், 23வது ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், 'இந்த அண்ணா திமுகவிற்காக அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம். அதை என் உயிரில் இருந்தே பிரிக்க முடியாது என்று கூறினார்.

உருக்கமான பேச்சு
அதிமுக நான் பாடுபட்டு வளர்த்த கட்சி. என்னால் இதையெல்லாம் பார்த்து சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. நிச்சயம் வருவேன். கட்சியை சரிசெய்வேன் என்று உருக்கமாக பேசி பிரபாகரனுக்கு உறுதி கொடுக்கிறார் சசிகலா.

தொண்டர்களிடம் பேசுவேன்
தொண்டர்களுடைய மனக்குமுறலை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால்தான் நான் எல்லாரிடமும் பேச ஆரம்பித்தேன் என கூறியுள்ளார். இதற்கு முன்பாக சசிகலா பேசியதாக வெளியான ஆடியோக்களில் கட்சி என்று மட்டுமே குறிப்பிட்டு பேசியிருந்தார். பிரபாகரிடம் பேசும் போது முதன் முறையாக அண்ணா திமுக என கட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

சசிகலா தேவையில்லை
சசிகலாவின் ஆடியோ ரிலீஸ் ஆகும் போதெல்லாம் முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினையாற்றுவார்கள். நேற்றைய தினம் பேட்டியளித்த ஜெயக்குமார் சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ்தான் கட்சியை வழிநடத்துவர் என்று கூறியுள்ளார்.

யாரை குழப்ப ஆடியோ ரிலீஸ்
சசிகலா தினம் தினம் தொண்டர்களிடம் பேசியது போல தெரியவில்லை. மொத்தமாக ஒரு நாளில் பலருக்கும் பேசி ரெக்கார்ட் செய்தது போல உள்ளது. யாரை குழப்புவதற்காக இந்த ஆடியோவை ரிலீஸ் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சசிகலா இல்லாமலேயே அதிமுக தற்போது எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ளது. ஒபிஎஸ், இபிஎஸ் தலைமையில் கட்சி உள்ள நிலையில், கட்சியைக் கைப்பற்ற இன்னும் என்னென்ன சதிகளை செய்யப்போகிறாரோ சசிகலா என்று உண்மையான தொண்டர்கள் கவலைப்பட ஆரம்பித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications