ஓ.பி.எஸ், இ.பி.எஸ். பதவிகளுக்கு தடை இல்லை... ஹைகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பால் சசிகலாவுக்கு பின்னடைவா?
சென்னை: அதிமுகவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கும் தீர்ப்பால் சசிகலாவுக்கு பின்னடைவா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2017-ல் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சசிகலா முதல்வர் நாற்காலியில் அமரவும் திட்டமிட்டார்.
ஆனால் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டது.
வேட்பாளர் பட்டியல்... முந்திக்கொண்ட அதிமுக... திகைத்த பாஜக... யார் எங்கு போட்டி..?
சசிகலா பதவி பறிப்பு
சசிகலா சிறைக்குப் போகும் போது டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்தார். அப்போது அதிமுகவில் ஓபிஎஸ் அணி தனியாக இருந்தது. சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணியுடன் இணைந்தது. பின்னர் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி, தினகரனின் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
ஒருங்கிணைப்பாளர் பதவி
மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதனிடையே தம்மை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது எனவும் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் தமக்கே உள்ளது எனவும் சசிகலா தொடர்ந்த வழக்கு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
ஹைகோர்ட்டில் வழக்கு
இந்நிலையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதாவது அதிமுகவில் பொதுக்குழுவை கூட்டுகிற அதிகாரம் பொதுச்செயலாளருக்குதான் உண்டு; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை செல்லாது என அறிவிக்க கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு பெஞ்ச், கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதில் எந்த சட்ட விரோதமும் இல்லை; தேர்தல் ஆணையம், உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என கூறியதுடன் இது தொடர்பாக சிவில் வழக்குதான் தொடர முடியும் எனவும் தீர்ப்பளித்து வழக்கையும் முடித்து வைத்தனர்.
சசிகலாவுக்கு பின்னடைவா?
தற்போதைய நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் வகிக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும் என்கிற வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது. இந்த தீர்ப்பு, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கிலும் எதிரொலிக்கக் கூடிய சாத்தியம் உள்ளது. இருந்த போதும் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்கிற வகையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு உள்ளது. ஆகையால் அதிமுக பொதுக்குழுவை கூட்டுகிற அதிகாரம் யாருக்கு என்கிற விவகாரம் விவாதிக்கப்படவில்லை. இதுதான் சசிகலா வழக்கின் முக்கிய அம்சமும் கூட. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை; இரண்டு வழக்குகளும் பொதுவாக ஒன்றாக தெரியலாம்.. ஆனால் சசிகலா தொடர்ந்த வழக்கு அடிப்படையிலேயே பொதுச்செயலாளரின் அதிகாரம் தொடர்பானது; அதுவும் பொதுச்செயலாளராக இருந்ததால் சசிகலா தொடர்ந்த வழக்கு. இந்த தீர்ப்பு தங்களது வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்கின்றன சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள்.