ஏன் இப்படி கேட்டுக்கிட்டே இருக்கீங்க? ஓபிஎஸ் தரப்பிற்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்.. எடப்பாடி குஷி
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. விசாரணையை எப்படியாவது நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்த நிலையிலும் வழக்கில் விசாரணை நடத்தப்பட முடியவில்லை.
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொதுக்குழு மூலம் இவர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உடனே உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
இதில் தனி நீதிபதி அமர்வு பொதுக்குழு கூடியது தவறு என்று தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி தரப்பு செய்த மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு பொதுக்குழு கூடியது சரிதான் என்று தீர்ப்பு வழங்கினார்கள். இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.
அவசர ஆலோசனை! உடனே ஊருக்கு கிளம்பிய ஓபிஎஸ்.. எடப்பாடிக்கு பாஜக அங்கீகாரம்? ஒரே வரியில் சொன்ன பதில்!
என்ன உத்தரவு
முன்னதாக இந்த வழக்கில், அதிமுகவில் எடப்பாடி மேற்கொண்டு மாற்றங்கள் எதையும் செய்ய கூடாது. அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த கூடாது. தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீங்கள் கட்சியில் மாற்றம் எதையும் செய்யாமல் இருப்பீர்களா என்று எடப்பாடியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நீங்கள் உறுதி கொடுக்க வேண்டும் என்று இரண்டு நீதிபதிகளும் எடப்பாடியிடம் கூறினர். அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இரண்டு நீதிபதிகளிடமும் கட்சியில் எந்த மாற்றமும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தார்.
வழக்கு என்ன?
இந்த பொதுக்குழு சட்ட விரோதமாக கூடியதாக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வமும் ஒரு மனுதாரராக சேர்ந்துள்ளார். இந்த பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வமும் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார்.வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்ஷு துலியா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில்தான் நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
என்ன நடந்தது?
முன்னதாக இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 30ம் தேதி விசாரணை நடத்துவதாக இருந்தது. ஆனால் அன்று வேறு வழக்குகள் இருந்தது. இதனால் அன்று விசாரணை செய்யப்பட முடியவில்லை. அதன்பின் வழக்கில் நேற்று விசாரணை செய்யப்படும் என்று கூறப்பட்டது. என்ன நடந்தாலும் நேற்று வழக்கில் கண்டிப்பாக விசாரணை செய்யப்படும் என்று கூறப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு நேற்று இந்த உறுதிமொழியை உச்ச நீதிமன்றம் வழங்கி இருந்தது. அதன்படியே நேற்று விசாரணை தொடங்கியது.
விசாரணை
இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி வைத்த வாதத்தில், அதிமுகவில் விதிகளை மாற்றி, பொதுக்குழுவை கூட்டி, பதவிகளில் மாற்றம் செய்து உள்ளோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளோம். ஆனால் தேர்தல் ஆணையத்தில் இந்த விதி மாற்றங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் விதி மாற்றங்களை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் தேர்தல் ஆணையம் உள்ளது. எனவே இந்த வழக்கிற்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.
நீதிபதிகள்
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றி விசாரிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு நீங்கள் தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுத்தாக்கலை உடனே செய்யுங்கள். அதற்கு எதிர்மனுதாரர்கள் இரண்டு நாட்களில் பதில் அளிக்க வேண்டும், என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து மனுதாரர் வைரமுத்து சார்பாக புதிய வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி இருந்தார். அவர், வைரமுத்துவின் வழக்கறிஞர் ஆஜராக முடியவில்லை. வழக்கறிஞர் ரஞ்சித் குமாா் உடல்நிலை காரணங்களால் ஆஜராக முடியவில்லை என்று கூறினார். இதை கேட்ட நீதிபதிகள், அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டனர். இதையடுத்து வைரமுத்து தரப்பு.. அவர்தான் வழக்கில் ஆஜராகி வருவதால் வழக்கை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
நீதிபதிகள்
இதையடுத்து நீதிபதிகள் குறுக்கிட்டு.. நாங்கள் இருக்கிறோம்.. எல்லோரும் தயார் என்றால் விசாரணை செய்யலாம் என்றனர். எடப்பாடி தரப்பு வழக்கில் வாதிட தயாராக இருப்பதாக கூறியது. ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரும் தயாராக இருப்பதாக கூறினார். இருப்பினும்.. எங்கள் ஆதரவாளர் வைரமுத்துவின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அதனால் வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து குறிப்பிட்ட நீதிபதிகள்.. நீங்கள் தானே இது கட்சி விவகாரம். வழக்கை உடனே விசாரியுங்கள் என்று கூறினீர்கள்.
மனுதாக்கல்
அதற்குத்தான் உச்ச நீதிமன்றம் வந்தீர்கள். ஆனால் ஏன் அடிக்கடி ஒத்திவைக்க சொல்கிறீர்கள். தொடர்ந்து ஏன் அவகாசம் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். இது நீதிமன்றத்திற்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பது தெரிய வேண்டாமா என்று கண்டிப்புடன் பேசினார்கள். இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தது. இதையடுத்து நீதிபதிகள், இந்த முறை வழக்கை ஒத்திவைக்கிறோம். 12ம் தேதி அடுத்த விசாரணை நடக்கும். அதற்குள் இடைக்கால நிவாரணத்திற்கு எடப்பாடி மனு தாக்கல் செய்யலாம். அதை ஆராய்வோம் என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.