பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நன்றி
சென்னை: மனைவி இறந்ததுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த செப்டம்பர் 1ம் தேதி சென்னையில் மாரடைப்பால் காலமானார்.
அவரது உடல், சென்னை மற்றும் பெரிய குளத்தில் பொதுமக்கள், உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்கு பிறகு நேற்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தகனம் செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்
மனைவியை இழந்து வாடும் ஓ பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் துரைமுருகன்,பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, கேபி முனுசாமி, செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி உள்பட பலர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர்.

மோடி கடிதம்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இறந்த தகவலை கேட்டு வேதனை அடைந்ததுடன், இரங்கல் தெரிவித்து கடிதமும் அனுப்பி வைத்தார். அந்தகடிதத்திற்கு நன்றி தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

நன்றி தெரிவித்து கடிதம்
அந்த கடிதத்தில் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு எனது அன்பான மனைவியின் திடீர் மறைவை தொடர்ந்து உங்கள் அன்பையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் வகையிலான கடிதம், செப்டம்பர் 1ம் தேதி எனக்கு கிடைத்து.

உங்கள் வார்த்தைகள்
துக்கமான இந்த நேரத்தில் ஆறுதலையும் இரங்கலையும் வழங்கிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆறுதலான வார்த்தைகள் உண்மையிலேயே எங்கள் குடும்பத்திற்கு புத்துயிர் அளித்தது. எங்கள் இதயங்களை உங்கள் வார்த்தைகள் அரவணைத்தது. குடும்பத்தில் மூத்த அண்ணன் போல் எங்கள் மீது பரிவு காட்டிதற்கு நன்றி" இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications