என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? அம்மா இறந்த இந்த நன்னாளிலே..துதியை மாற்றி பாடிய இபிஎஸ்! மாஜிக்கள் வேற!
சென்னை : தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவின் பல்வேறு அணியினர் மாறி மாறி அஞ்சலி செலுத்தினர். அப்போது உறுதிமொழி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி பேசிய பேச்சும் அதனை முன்னாள் அமைச்சர்கள் அப்படியே ஒப்பித்ததும் தான் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டு காலமாக இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது.
விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் தேதி ஆணையத்தின் அறிக்கையை ஆணையத்தின் விசாரணை தலைவரான ஆறுமுகசாமி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா மரணம்
ஆணைய அறிக்கையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ், சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அடுக்கடுக்காக பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

7 பேர் காரணம்
ஜெயலலிதா வெளிநாடு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படாததற்கு 7 பேர் காரணம் எனவும், ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல அப்பல்லோ மருத்துவமனை எதிராக இருந்தது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அதிமுகவினர் துக்கம் அனுசரித்து வரும் நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின்படி டிசம்பர் நான்காம் தேதி தான் அவரது இறந்த நாள் எனவும் டிசம்பர் நான்காம் தேதி பிற்பகல் 3 50 மணிக்கு ஜெயலலிதாவுக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நினைவு நாள்
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அந்தக் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர். அதன்படி இன்று சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் என கூறிவரும் ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.

எடப்பாடி உளறல்
இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக எடப்பாடி தரப்பில் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசிய பேச்சு தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், கே பி முனுசாமி, வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது உறுதிமொழியை எடப்பாடி பழனிச்சாமி வாசிக்க முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் அதை அப்படியே திரும்ப கூறினார்கள்.

அம்மா மறைந்த நன்னாளில்
அப்போது எடப்பாடி பழனிச்சாமி 'அம்மா மறைந்த நாளில்' என்பதற்கு பதிலாக 'அம்மா மறைந்த இந்த நன்னாளில்' என கூறினார். ஆனால் ஒருவர் கூட அதை கவனிக்காமல் அப்படியே திரும்ப கூறினர். அம்மா மறைந்த நாள் உங்களுக்கு நன்னாளாக என சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டியை கடுமையாக விமர்சித்து வருகிறது ஓபிஎஸ் கோஷ்டி. மேலும் எழுதிக் கொடுத்தவர் தான் இப்படி என்றால் வாசித்த எடப்பாடிக்கு ஒன்றும் தெரியாதா, அதனை அப்படியே ஒப்புவித்த மாஜிக்களுக்கும் ஒன்றுமே தெரியாத என நெட்டிசன்களும் கிண்டல் அடித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications