அதிமுக நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ! ஓபிஎஸ் சீட்டை பிடித்த ஆர்.பி.உதயகுமார்! குருவை மிஞ்சிய சிஷ்யன்!
சென்னை : அதிமுக ஜெயலலிதா காலம் முதல் எடப்பாடி பழனிசாமியின் காலம் வரை ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த.. ஏன் சிஷ்யராகவே அறியப்பட்ட ஆர்.பி.உதயகுமார் தற்போது அதிமுக எதிர்கட்சி துணை தலைவராக உயர்ந்துள்ள நிலையில், அவர் ஓபிஎஸ் இடத்தை பிடித்து விட்டார் என மதுரை அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது உட்கட்சி நிகழ்வுகள்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளார் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம். நீதிமன்றம் வரை சென்றும் பொதுக்குழுவை நிறுத்த முடியாத நிலையில் நினைத்ததை முடித்தார் இபிஎஸ்.
நீட் தேர்வு மதிப்பெண் வழக்கு.. அசல் விடைத்தாளை காட்டுங்க.. என்டிஏ-வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுக்குழு
கட்சி விரோத நடவடிக்கைகள் ஈடுபட்டதாக கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் புதிய நிர்வாகிகள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அந்தப் பட்டியலின்படி அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் கேபி முனுசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள்
அதேபோல் தலைமை நிலைய செயலாளராக எஸ்பி வேலுமணி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கு அடுத்ததாக வெளியிடப்பட்ட பட்டியலை முன்னால் அமைச்சர்களான செல்லூர் ராஜு தனபால் சி.வி சண்முகம் கேபி அன்பழகன் கேடி ராஜேந்திர பாலாஜி காமராஜ் கடம்பூர் ராஜு ராஜன் செல்லப்பா பாலகங்க ஆகியோர் புதிய அமைப்புச் செயலாளர் அறிவிக்கப்பட்டனர். இதற்கு நீதிமன்றத்தின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
ஆர்பி உதயகுமார்
குறிப்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் நியமிகப்பட்டுள்ளார். ஓபிஎஸ்ஸும், ஆர்பி உதயகுமாரும், ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும் ஜெயலலிதா காலத்தில் இருந்து ஒன்றாக பயணித்தவர்கள் என்பதாலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆர்பி உதயகுமார் மிக நெருக்கமாகவே இருந்து வந்தார். ஆனால் தர்மயுத்தத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சாய்ந்தாலும் மறைமுகமாக ஓபிஸ்க்கு ஆர்.பி.உதயகுமார் ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது எடப்பாடி அணியில் நிரந்தரமாக ஐக்கியமாகி எதிர்கட்சி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஏற்கனவே கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்தின் இடத்தை ஆர்பி உதயகுமார் பெற்றுவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது சட்டமன்றத்திலும் ஓபிஎஸ் இடத்தை பிடித்திருக்கிறார். முன்னாள் அமைச்சரான ஆர்பி உதயகுமார் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டது குறித்து சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மற்றும் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முதன் முறையாக அடியெடுத்து வைக்கிறார் உதயகுமார்.
குருவை விஞ்சிய சிஷ்யர்
இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்த இடத்தில், ஓபிஎஸ் அமர்ந்திருந்த அதே இடத்தில் எதிர்க்கட்சி துணை தலைவராக அமர போகிறார் ஆர்பி உதயகுமார். அதே நேரத்தில் இரு அணியினருக்கும் சம அளவில் இடம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறியிருக்கிறார். என்ன இருந்தாலும் அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் இடத்தை ஆர்பி உதயகுமார் பிடித்துவிட்டார். கடந்த காலங்களில் சிஷ்யராக இருந்த அவர் தற்போது குருவையே மிஞ்சிய சிஷ்யராக மாறிவிட்டார் என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் ஆர்பி உதயகுமார் ஆதரவாளர்கள்.