ஆகட்டும் பார்க்கலாம்! எம்ஜிஆரின் 1976 கோவை அதிமுக பொதுக்குழு பார்முலாவை நம்பும் எடப்பாடி கோஷ்டி!
சென்னை: அதிமுக மீண்டும் இரண்டாக பிளவுபடுமா? அதிமுகவின் உயிர்நாடியாக இருக்கும் இரட்டை சிலை சின்னம் மீண்டும் முடங்குமா? என்பதற்கான விடைகளைத் தரப் போகிறது இன்றைய வானகரம் பொதுக்குழு.
Recommended Video
அதிமுகவின் பொதுக்குழு ஜூன் 23-ல் நடைபெற உள்ளது என அறிவித்தது முதலே அக்கட்சியில் அக்கப்போர் அதிதீவிரமாகிவிட்டது. அதிமுக பொதுக்குழுவை பயன்படுத்தி கட்சி பொதுச்செயலாளராகிவிட தற்போதைய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்திருந்தார். இது தமது அரசியல் எதிர்காலத்தையே நாசமாக்கிவிடும் என்பதால் ரொம்பவே அதிர்ந்து போனார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் சசிகலாவை சேர்க்கும் விவகாரம், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?, அதிமுகவின் சட்டசபை கட்சித் தலைவர் யார்? உள்ளிட்ட விவகாரங்களில் ரொம்பவே நிதானமாகவே காய்களை நகர்த்தியிருந்தார் ஓபிஎஸ். ஆனால் அப்படி நிதானமாக காய்நகர்த்தியதாலோ என்னவோ ஓபிஎஸ்-க்கு அடுத்தடுத்து அதிமுகவில் பின்னடைவுதான் ஏற்பட்டது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் பலத்தையும் கொடுத்தது.
அதிமுக அதகளம்! குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விரும்பாத திமுக! ஜென்டில் மேன் முதல்வர் ஸ்டாலின்!
ஓபிஎஸ் போராட்டம்
ஓபிஎஸ்-ன் இந்த அசால்ட் போக்குக்கு காரணமும் இருந்தது. தாம் ஒருங்கிணைப்பாளர்; தமது கையெழுத்து இல்லாமல் அதிமுகவில் எதுவும் நடந்துவிடாது என்கிற நம்பிக்கையுடன் இருந்தார் ஓபிஎஸ். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ, இருக்கக் கூடிய ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமையாக ஒரு சிறு ஓட்டை கூட விழுந்துவிடாமல் பயன்படுத்தியது. இதன் உச்சமாகத்தான் ஒற்றைத் தலைமை, பொதுக்குழுவில் பொதுச் செயலாளராவது என்கிற வியூகம். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துவிட்டால் தமக்கு மிச்சம் இருக்கிற பொருளாளர் பதவிதான் மிஞ்சும் என்பதால் அஞ்சிப் போன ஓபிஎஸ் தாமே அதிகாரம் படைத்தவர் என்பதற்காக இம்முறை பகிரங்கமாக குரல் கொடுத்தார்; பொதுக்குழுவையே நடத்தவிடாமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து பார்த்தார்; நீதிமன்றப் படிகளும் ஏறினார்.. சென்னை உயர்நீதிமன்றம் நேற்று இரவும் நள்ளிரவும் கொடுத்த தீர்ப்புகள் 2 தரப்பையும் சமன் செய்வதாகவே இருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
கோர்ட் உத்தரவு என்ன?
தற்போதைய நிலையில் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என்பது உயர்நீதிமன்றத்தின் உத்தரவு; இது மேலோட்டமாக ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமானதுதான். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ இதற்காக மனம் தளரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதற்கு காரணமே 1976-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எம்ஜிஆர் பின்பற்றிய நடைமுறைதான்.
எம்ஜிஆர் பொதுக்குழு
அதாவது அண்ணா திமுக என்றுதான் 1976-ம் ஆண்டு கட்சியின் பெயர். 1976-ம் ஆண்டு பொதுக்குழுவில் கட்சியின் பெயரை அனைத்திந்திய அண்ணா திமுக என மாற்ற முடிவு செய்தார் எம்ஜிஆர். ஆனால் அதிமுகவின் சீனியர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக பெயரில் அனைத்திந்திய என்பதை சேர்க்க கூடாது என வலியுறுத்தினர். அப்போது அதிமுக பொதுக்குழுவில் குழப்பம் ஏற்படும் நிலை உருவானது. இதனை சமாளிக்க, பொதுக்குழுவிலேயே வாக்கெடுப்பு நடத்தினார். வாக்கெடுப்பின் முடிவுப்படி கட்சியின் பெயர் அனைத்திந்திய அண்ணா திமுக என மாறியது. பிரச்சனை அத்துடன் முடிந்துவிடவில்லை. கட்சியின் பெயரை மாற்றும் தம்முடைய முடிவுக்கு எதிராக நின்ற சீனியர்களை கட்சியில் இருந்தே டிஸ்மிஸ் செய்தார் எம்ஜிஆர் என்பதுதான் வரலாறு.
ஈபிஎஸ் வியூகம்
இப்போதும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் போகலாம்; ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் பலம் யாருக்கு என்பதை முடிவு செய்யும் வகையில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கலாமா? இல்லையா? என்பது தொடர்பாக ஒரு வாக்கெடுப்பு அல்லது பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக ஒரு வாக்கெடுப்பை எடப்பாடி பழனிசாமி நடத்த வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.