'ரெய்டு நடந்தா என்ன.. ஒற்றுமையுடன் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பணியாற்றுங்கள்' அதிமுக தலைமை அட்வைஸ்
சென்னை: ஒருபுறம் முன்னாள் அமைச்சர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ஆகியரோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக தலைமை இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் பல்வேறு காரணங்களால் சில ஆண்டுகள் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
இதனால் மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பிய பல கோடி ரூபாய் நிதியும் திருப்பி அளிக்கப்பட்டன.

உள்ளாட்சித் தேர்தல்
இது குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததைத் தொடர்ந்து, 3 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு 2019இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதுவும் ஊரகப் பகுதிகளில் மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டன. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. விடுபட்ட இடங்களில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய ஆலோசனை
இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை நடத்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 9 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை உடனேயே தொடங்க உத்தரவிட்டுள்ள அதிமுக தலைமை, மக்களுடன் தொடர்பிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

ஒற்றுமையுடன் இருங்கள்
மேலும் இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தங்களுக்குள் இருக்கும் சச்சரவுகளைக் கடந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி தேடித் தர வேண்டும் என நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாததைப் பொதுமக்கள் மத்தியில் அதிமுக நிர்வாகிகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் வீட்டில் ரெய்டு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து மூத்த நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவும் அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களைக் குறி வைத்து திமுக அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள நிலையில், இது குறித்தும் அதிமுக தலைமை ஆலோசிக்கவுள்ளது.
Recommended Video

தேர்தல் எப்போது
உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15க்குள் தேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தாலும், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது. தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரே வரும் செப்டம்பர் 21 வரை நடைபெறவுள்ளதால், செப்டம்பர் 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே தெரிகிறது. அதேநேரம் வரும் அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் நடத்தத் திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications