சீரியசாக பேசிக்கொண்டிருந்த ஓபிஎஸ்.. கரெக்டா கட்சி தாவிய மாணிக்கம்! கூட இருந்தே வேலையை முடித்த பாஜக
சென்னை: அதிமுகவிலிருந்து முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவராக பிரிந்து பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுவருகிறார்கள்.
பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது அதிமுகவா, பாஜகவா என்று புரியாத அளவிற்கு திமுக எதிர்ப்பு அரசியலை பாஜக கையில் எடுத்து செயல்பட்டு வருகிறது என்ற முணுமுணுப்புகள் ஒரு பக்கம் வந்த நிலையில், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரான, முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
இத்தனைக்கும் பாஜக, அதிமுகவின் தோள் மீது கை போட்டுக் கொண்டிருக்கும் கூட்டணி கட்சி தானே தவிர எதிர்த்து அரசியல் நடத்தக்கூடிய கட்சி இல்லை. தோளில் கை போட்டுக்கொண்டு அதிமுகவில் பின்னால் பாஜக குத்துகிறதா என்ற முணுமுணுப்பும், ஆதங்க குரல்களும், சமூக வலைத்தளங்களில் அதிமுகவின் தீவிர விசுவாசிகள் எழுப்பப்பட ஆரம்பித்துள்ளன.
என்னப்பா நடக்குது... கூட்டணியில் இருக்கும்போதே அதிமுக மாஜி எம்.எல்.ஏவை அலேக்காக தூக்கியது பாஜக!
நயினார் நாகேந்திரன்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கூட்டணி கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது பாஜக. அன்று முதல் பல முக்கிய தலைவர்கள் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமானவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர். 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருடன் வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன், ராஜராஜன் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர். இதுதான் ஆரம்பப்புள்ளி. நயினார் நாகேந்திரன் தற்போது சட்டசபை பாஜக குழு தலைவராக செயல்பட்டு வருகிறார். காந்தி, வானதி சீனிவாசன் ஆகிய பாஜகவின் முக்கிய புள்ளிகளுக்கு தராத முக்கியத்துவம் இதுவாகும். அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்தால் முக்கிய முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்ற சமிக்ஞை இதன்மூலமாக வழங்கப்பட்டுவிட்டது.
நமீதா, ராதா ரவி
ஜெயலலிதா காலத்தில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக உலா வந்தவர்கள் நடிகர் ராதாரவி, நடிகை நமீதா போன்றவர்கள். ஜெயலலிதா கையால் அதிமுக உறுப்பினர் அட்டையை பெற்றவர்கள் இவர்கள். ஆனால், அடுத்தடுத்து பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது நடந்தது 2019ம் ஆண்டு. இப்படித்தான் அதிமுகவின் தீவிர விசுவாசியாக இருந்த நடிகர் செந்தில் கடந்த மார்ச் மாதம் அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதோ இப்போது மாணிக்கம் பாஜகவில் இணைந்து விட்டார்.
திமுக எதிர்ப்பு
பாஜக, அதிமுகவை போலவே, இரண்டு வகைகளில் அரசியல் செய்து வருகிறது. அதிமுக அடி நாத அரசியல் திமுக எதிர்ப்பு. அதை பாஜக கையில் எடுத்துவிட்டது. தொடர்ந்து திமுக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறது. திமுக தரப்பில் இருந்தும் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கப் படுகிறது. இதனால் இந்த இரு கட்சிகளும் தான் தொடர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகின்றன. அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக காணப்படுகிறது.
இரு விஷயங்கள்
இன்னொரு விஷயம் அதிமுக அதிகமாக நம்பியது துணை நடிகர் நடிகைகளை தான். பிரச்சாரத்தின்போது, ராமராஜன், குண்டுகல்யாணம், செந்தில், நமீதா உள்ளிட்டோர் சின்ன சின்ன ஊர்களில் தீவிர பிரச்சாரங்கள் செய்வார்கள். பெண்கள் வாக்குகளை பெறுவதில் இந்த பிரச்சாரங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதிமுகவில் இருந்த பல நடிகர் நடிகைகளை பாஜக இணைக்க ஆரம்பித்து விட்டது. நடன இயக்குனர் கலா, பிரபல நடிகையாக இருந்த ராதா, குணச்சித்திர நடிகர் தேவன் உள்ளிட்ட யாரையும் பாஜக விடுவது கிடையாது. கட்சியில் வளைத்துப் போட்டு விடுகிறது. திமுக எதிர்ப்பு, துணை நடிகர்கள் பிரச்சாரம் ஆகிய இரண்டு அதிமுகவின் வெற்றி பார்முலா இப்போது பாஜக கையில் உள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அதிமுகவிற்கு இன்று பாஜக மற்றொரு ஷாக் பரிசு கொடுத்துள்ளது.
ஓபிஎஸ் பேசும்போதே வேட்டு
இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்ன தெரியுமா.. டிசம்பர் மாதத்துக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றன. தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. அந்த நேரத்தில்தான் திருப்பூரில் வைத்து அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர்களில் ஒருவரான சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்துள்ளார். மாநில செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம் அதிமுக வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர் ஒருபக்கம் பேசிக் கொண்டிருந்த நிலையில் ஏற்கனவே வழிகாட்டுதலில் குழுவில் இருந்த ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இதுதான் அதிமுக தொண்டர்களை கூடுதலாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படியே போனால் அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று அதிமுக விசுவாசிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருவதைப் பார்க்க முடிகிறது.