நிரந்தர பொதுச்செயலாளர்.. ஒற்றைத்தலைமை ஓபிஎஸ்.. எடப்பாடிக்கு எதிராக தேனியில் களைகட்டும் போஸ்டர்கள்
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்கும் ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்கிறோம் என்று தேனி நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையேற்று கட்சியை வழி நடத்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்கும் ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்கிறோம் என்று தேனி நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Recommended Video
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வரும் நிலையில் அதிமுக எதிர்கொண்ட நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் மிகப்பெரிய அளவிலான தோல்வியை சந்தித்தது.
இதனையடுத்து அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற முழக்கமும், சசிகலா தலைமையேற்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. கட்சியைக் கைப்பற்ற காய் நகர்த்தி வருகிறார் சசிகலா. கட்சிக்குள் சசிகலாவிற்கு இடமேயில்லை என்று அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கூறி வருகின்றனர்.
அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? அவர பத்தி ஏன் பேசணும்.. அதிமுக மீட்டிங் - சூடான ஜெயக்குமார்!
அதிமுக பொதுக்குழு கூட்டம்
இந்த நிலையில் வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மீண்டும் அதிமுகவின் தலைமை குறித்த போஸ்டர் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி
பெரியகுளம் தென்கரை பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் செல்லும் சாலை மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் விரைவில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வாழ்த்துகிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பெரியகுளம் பகுதியில் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போஸ்டர் ஒட்டியவர் கைது
அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டதாக சுரேஷ் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை பெரியகுளம் தென்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "அதிமுக ஒன்றே எங்கள் இயக்கம் ஐயா ஓபிஎஸ் ஒருவரே எங்கள் தலைவர்" "தாய் தந்த தலைவர் ஐயா ஓபிஎஸ்","தாயின் தலைமகனே தொண்டர்களின் பாதுகாவலரே உங்களின் ஒற்றைத்தலைமையில் கழகத்தை வழி நடத்திட வாருங்கள்" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
நிரந்தர பொதுச்செயலாளர்
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்கும் ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்கிறோம் என்று தேனி நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தாயின் தலைமகனே..ஒற்றை தலைமையேற்று கழகத்தை வழி நடத்திட வாருங்கள் என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
எம்ஜிஆர் மாளிகையில் கோஷம்
பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி யாராவது கோஷம் எழுப்பினால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உட்பட 150 பேர் எம்ஜிஆர் மாளிகையின் உள்ளே விவாதித்துக் கொண்டிருக்கையில், எம்ஜிஆர் மாளிகையின் வெளியே ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களும் ,எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று போட்டி கோஷம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
அதிமுக பொதுக்குழு
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற இருக்கும் நிலையில், அந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக மாவட்டச் செயலாளர்கள் துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழுவுக்கு அழைப்பு வழக்கம் . ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு இல்லை என்றாலும் வானகரத்தில் நடைபெறப்போகும் பொதுக்குழுவில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கலாம்.