500 ஏக்கர்.. ஜாலியா இருக்கலாமே! பாஜகவிடம் பேசி ஆளுநராக போயிருங்க! ஓபிஎஸ்க்கு ராஜன் செல்லப்பா ஐடியா!
சென்னை : டெல்லி தலைமையிடம் நெருக்கமாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவிடம் கேட்டு, மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு ஆளுநராக சென்றுவிடலாம் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது உட்கட்சி நிகழ்வுகள்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளார் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம். நீதிமன்றம் வரை சென்றும் பொதுக்குழுவை நிறுத்த முடியாத நிலையில் நினைத்ததை முடித்தார் இபிஎஸ்.

அதிமுக பொதுக்குழு
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் புதிய நிர்வாகிகள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அந்தப் பட்டியலின்படி அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் கேபி முனுசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள்
அதேபோல் தலைமை நிலைய செயலாளராக எஸ்பி வேலுமணி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கு அடுத்ததாக வெளியிடப்பட்ட பட்டியலில் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, தனபால், சி.வி சண்முகம் ,கேபி அன்பழகன், கேடி ராஜேந்திர பாலாஜி காமராஜ் கடம்பூர் ராஜு ராஜன் செல்லப்பா பாலகங்க ஆகியோர் புதிய அமைப்புச் செயலாளர் அறிவிக்கப்பட்டனர். இதற்கு நீதிமன்றத்தின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

ராஜன் செல்லப்பா
கடந்த காலங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் தோழர்களாக கருதப்பட்ட மதுரை ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோரும் தற்போது ஓபிஎஸ்-க்கு எதிராக திரும்பி இருக்கின்றனர். குறிப்பாக பழைய பகையை மறந்து ஓபிஎஸ்ஸுக்காக மதுரை நிர்வாகிகள் ஒன்றாக கரம் கோர்த்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி தலைமையிடம் நெருக்கமாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவிடம் கேட்டு, மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு ஆளுநராக, ஓபிஎஸ் சென்றுவிடலாம் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சனம் செய்துள்ளார்.

ஆளுநர் பதவி
மதுரை மாவட்டம் மேலூரில் பால் விலை உயர்வு சொத்து வரி மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக மேலூர் நகர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, ஓபிஎஸ் அதிமுகவினருக்கு தொல்லை கொடுக்காமல் பாஜக மேல் இடத்தில் கூறி வட மாநிலங்களுக்கு ஆளுநராக சென்று விடலாம் என தெரிவித்தார்.

அனைவருக்கும் பதவி
மேலும் ஓபிஎஸ் அதிமுகவினருக்கு இடையூறு செய்யாமல் பாஜக மேல் இடத்தில் கேட்டு மேகாலயா திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு ஆளுநராக சென்று 500 ஏக்கரில் அமைதியாக வாழலாம் என ஆலோசனை வழங்கிய அவர் அவ்வாறு செய்வதன் மூலம் அதிமுக தொண்டர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.மேலும் புதிய பதவிகள் வழங்குகிறோம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் கட்சியில் இல்லாத பலருக்கும் பதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications