கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டலை! அப்பாவு முடிவால் அப்செட்! ஆதரவாளர்களிடம் புலம்பிய ஆர்பி உதயகுமார்!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி தரப்பில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஆர்பி உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டாலும் பெயருக்கே அந்த பதவி இருக்கிறது. அடுத்த நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரிலும் ஓபிஎஸ்ஸே எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர்வார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ள நிலையில் ஆதரவாளர்களிடம் புலம்பி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது உட்கட்சி நிகழ்வுகள்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளார் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம். நீதிமன்றம் வரை சென்றும் பொதுக்குழுவை நிறுத்த முடியாத நிலையில் நினைத்ததை முடித்தார் இபிஎஸ்.

ஆர்பி உதயகுமார்
பொதுக்குழுவில் நத்தம் விஸ்வநாதன் கே பி முனுசாமி ஆகியோர் துணை பொது செயலாளர் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவரது முன்னாள் சிஷ்யரான ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்தார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த சில நாட்களாக நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று ஆர்பி உதயகுமாரும் பங்கேற்று வந்தார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
இதனால் உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள் மதுரை முழுக்க எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்பி உதயகுமாருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் பிளக்ஸ் என மாஸ் காட்டினர். அதே நேரத்தில் சபாநாயகர் அப்பாவு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் தாமதம் செய்த நிலையில், நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் சட்டமன்ற மாண்பு படி ஓ.பன்னீர்செல்வமே எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தொடர்வதாக அறிவித்ததோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

சபாநாயகர் அப்பாவு
இந்நிலையில் ஜனவரி 9ஆம் தேதி 2023ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட இருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த கூட்டத்தொடரின் போது அவர்களுக்கு குறிப்பு உரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வரவில்லை. அதனால் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை பொறுத்தவரை இதற்கு முந்தைய அதே நிலை (எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பது) தொடரும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார் என மறைமுகமாக தெரிவித்தார்.

அதிருப்தி
கடந்த முறை நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் முதல் நாள் அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அவையை புறக்கணித்தனர். இரண்டாவது நாளிலும் அதே விவகாரம் காரணமாக மோதலில் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அதிமுக உறுப்பினர்கள் மொத்தமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், ஐயப்பன் உள்ளிட்டோர் அவையில் இருந்தனர். இந்த நிலையில் இந்தக் கூட்டத் தொடரிலும் ஓ.பன்னீர்செல்வமே எதிர்க்கட்சி துணைத் தலைவராக பங்கேற்பார் என்பதை சபாநாயகர் அப்பாவு உறுதி செய்து இருக்கிறார்.

ஆதரவாளர்கள் புலம்பல்
எதிர்க்கட்சித் துணைத் தலைவரை சபாநாயகர் தான் அங்கீகரிக்க வேண்டும். தற்போதும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என ஆர்பி உதயகுமார் அவரது ஆதரவாளர்களும் கூறி வந்தாலும் தற்போது வரை ஓ.பன்னீர்செல்வமே எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர்கிறார். இதனால் ஆர்.பி.உதயகுமார் தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஆர் பி உதயகுமாரை ஓரங்கட்டி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரத்தில் எடப்பாடியின் ஆதரவு தனக்கு கிடைக்குமா என்பதும் அவரது கவலையாக இருக்கிறது. இதனால் ஓபிஎஸ்க்கு ஆதரவாக திமுக செயல்படுவதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். அவரும் ஆதரவாளர்களிடம் தனது கவலையை தெரிவித்துள்ளதாகக் கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications