எஞ்சியிருந்த தஞ்சை, பெரம்பலூர் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக
சென்னை: அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் எஞ்சியிருந்த தொகுதிகளான தஞ்சாவூர், பெரம்பலூருக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக சார்பில் பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில் பாமக, பாஜகவுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளில் 177 தொகுதிகளில் போட்டியிட இரு கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது. இதனிடையே ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் தங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டது.
ஆனால் அதிமுகவோ 6 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என கூறியது. இதனால் தேமுதிகவை போல் தமாகாவும் வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய தினம் அந்த 6 தொகுதிகளை தமாகா ஏற்றது. தமாகாவுக்கு திருவிக நகர், பட்டுக்கோட்டை, ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதில் லால்குடி தொகுதிக்கு நேற்றைய தினம் அதிமுக சார்பில் ராஜாராமன் என்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். தற்போது அந்த தொகுதியை தமாகா கேட்டு பெற்றதால் அந்த தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ராஜாராமன் வாபஸ் பெறப்படுகிறார்.
இதனால் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 3 தொகுதிகள் அதிமுகவசம் உள்ளன. அதில் இரு தொகுதிகளுக்கு தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். தஞ்சையில் அறிவுடைநம்பி, பெரம்பலூர்- இளம்பை இரா தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அதிமுக சார்பில் பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications