அதிமுக வழிகாட்டு குழுவில் மூத்த நிர்வாகிகளும் புறக்கணிப்பு.. அதிருப்தியில் முக்கிய தலைகள்!
சென்னை: அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவில் கட்சியின் மூத்த தலைவர்களான செங்கோட்டையன், செல்லூர் ராஜு, கேபி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, பண்ருட்டி ராமச்சந்திரன், கோகுல இந்திரா, பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சண்முகநாதன். அன்வர் ராஜா உள்ளிட்டவர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை இந்தகுழுவில் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செயற்குழுவில் இந்த விவகாரம் வெடித்தது. அப்போது அக்டோபர் 7ம் தேதி இதுபற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று மூத்த நிர்வாகிகள் அறிவித்தனர். இதன்படி மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் நேற்று முன்தினம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதேபோன்று 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அறிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு
குழுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் ஆகிய 6 பேரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், பா.மோகன், இரா.கோபாலகிருஷ்ணன், கி.மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆகிய 5 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

செல்லூர் ராஜூக்கும் இடமில்லை
அதேநேரம் வழிகாட்டு குழுவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலருக்கு இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, கேபி.அன்பழகன், உதயகுமார் ஆகியோர் இடம் பெறவில்லை. இதேபோல் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை. இதில் சிலர் கடந்த 2 நாட்களாக வழிகாட்டு குழுவில் இடம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

பொள்ளாச்சி ஜெயராமன்
அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் பெயரும் வழிகாட்டுக்குழுவில் இடம்பெறவில்லை. அதனால் அவர்க கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 2017ம் ஆண்டு முதல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்து வந்தவர் நத்தம் விஸ்வநாதன். இதேபோல் எம்பி பதவி கிடைப்பதற்காக எடப்பாடிக்கு ஆதரவாகவும் செயல்பட்டார். இருவரையும் தீவிரமாக ஆதரித்தார், ஆனாலும் அவருக்கு வழிகாட்டு குழுவில் இடம் கிடைக்கவில்லை. அதேபோன்று மூத்த உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை.

அன்வர் ராஜா
முன்னாள் அமைச்சர் செம்மலை, சண்முகநாதன் உள்ளிட்டோர் வழிகாட்டு குழுவில் இடம்பெற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.. ஆனாலும், அவர்களுக்கு இடம் கடைக்கவில்லை. இதேபோல் முஸ்லிம்களுக்கு அதிமுகவில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் முன்னாள் எம்பி அன்வர் ராஜாவும் வழிகாட்டு குழுவில் இடம் கிடைக்கும் என்று ,அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கும் பதவி வழங்கப்படவில்லை.

வழிகாட்டுகுழுவில்
அதேபோன்று அதிமுகவில் புதிதாக அறிவிக்கப்பட்ட 11 பேர் வழிகாட்டு குழுவில் பெண்களுக்கு ஒரு இடம் கூட அளிக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது,
உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். அதேபோன்று கட்சி பதவியிலும் பெண்களுக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்தார். ஆனால், ஒரு பெண்ணுக்கு கூட வழிகாட்டு குழுவில் பதவி வழங்கப்படவில்லை.

யார் யார் என்னபிரதிநிதித்துவம்
சாதி ரீதியாக பிரதிநிதித்துவம் என்று பார்த்தால் எடப்பாடி அணியில் இடம்பெற்றுள்ள திண்டுக்கல் சீனிவாசன், காமராஜர் ஆகிய இருவரும் முக்குலத்தோர், சி.வி.சண்முகம் வன்னியர், தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் கொங்கு வேளாளர், ஜெயக்குமார் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.சி.டி.பிரபாகர் கிறிஸ்துவ வன்னியர், பா.மோகன் வன்னியர், மனோஜ் பாண்டியன் கிறிஸ்துவ நாடார், கி.மாணிக்கம் எம்எல்ஏ தேவேந்திரகுல வேளாளர், இரா.கோபாலகிருஷ்ணன் யாதவர் பிரிவை சார்ந்தவர் ஆவர்.












Click it and Unblock the Notifications