கொங்கு பெல்ட்... ஈபிஎஸ் கோட்டையை சைலன்ட்டாக அசைத்து பார்க்கும் சசிகலா அண்ட் கோ
சென்னை: அதிமுகவில் நடக்கும் அனேக அக்கப்போர்களுக்கு மத்தியில் சசிகலா அமைதியாகவா இருப்பார்? தற்போது அதிமுகவில் ஓங்கி இருக்கும் ஈபிஎஸ் அணியை அசைத்து பார்க்கும் அண்டர் கிரவுண்ட் வேலைகளை கொங்கு பெல்ட்டில் துரிதமாக நடத்தி கொண்டிருக்கிறதாம் சசிகலா அண்ட் கோ.
அரசியலைவிட்டு ஒதுங்கி இருப்பதாக சசிகலா அறிவித்தாலும் எந்த நிமிடத்திலும் அதிமுக தம் வசமாகும் என்கிற ஏதோ ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறாராம் சசிகலா. சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடந்து வரும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கும் சசிகலாவுக்கு இந்த நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.
கொரோனா 2-ம் அலையில் உண்மைகளை மறுப்பது, மறைப்பதுதான் மத்திய பாஜக அரசின் அணுகுமுறை: ப.சிதம்பரம் பொளேர்
அதேநேரத்தில் அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என எந்த அணியும் வலிமையாகிவிடக் கூடாது; எல்லோரும் தம்மை தேடியே வர வேண்டும் என்கிற கணக்குகளுடன் சசிகலா அண்ட்கோ கவனமாக காய்நகர்த்தி வருகிறது. இதில் விழுந்த முதல் விக்கெட் ஓபிஎஸ்தான். ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை தினகரன், சசிகலாவின் தயவு தேவை என்கிற நிலையில் இருக்கிறார்.
ஓபிஎஸ் பின்னணியில் சசி அணி?
இதனை தேர்தலுக்கு முன்னர் இருந்தே பல்வேறு வகையில் பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார். முதல்வர் வேட்பாளர் தொடங்கி தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை ஓபிஎஸ் ஆடுகிற ஆட்டத்தின் பின்னணியில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த அந்த முக்கியமான நபர்தான் காரணம் என கை காட்டுகின்றனர் அதிமுக சீனியர்கள்.
ஈபிஎஸ் அணி டார்கெட்
ஓபிஎஸ் தரப்பை தங்களது பிடிக்குள் கொண்டு வந்ததைப் போல ஈபிஎஸ் அணிக்கும் குறிவைத்திருக்கிறது சசிகலா தரப்பு, ஈபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரையில் தினகரனை விட்டு விட்டு சசிகலா, கட்சிக்கு திரும்பலாம்; அவரது வழிகாட்டுதல்களை ஏற்று செயல்பட தயார் என்கிற மனநிலையில் இருக்கின்றனர். சசிகலா சிறையில் இருந்த போதே இதை தெரியப்படுத்தியும் இருக்கின்றனர்.
ஈபிஎஸ் அணியை கலகலக்கும் முயற்சிகள்
தினகரனின் நடவடிக்கைகளை சசிகலா ஏற்காத போதும் அவரை விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறார். இதன்பின்னணியில் தொழில், குடும்ப உறவுகள் என பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் ஈபிஎஸ் அணி என்பதையே கலகலக்க வைப்பதற்கு என்ன என்ன செய்ய முடியுமோ அதை அந்த முக்கியமான நபர் மூலம் செய்து கொண்டிருக்கிறது சசிகலா தரப்பு.
சீனியர்களுக்கு வலை
அதிமுகவில் ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை தான் அதிகம். இதில் ஈபிஎஸ் அணியின் சில மூத்த தலைவர்களை வளைத்தாலே போதும்.. அவர்களை நம்பி இருக்கும் எம்.எல்.ஏக்கள் ஓடிவந்துவிடுவார்கள் என கணக்குப் போட்டு அந்த சீனியர்களுக்கு வலை விரிக்கிறார்களாம். அதிமுகவின் உயர் பொறுப்புகள் மீது நீண்ட நாட்களாக கண் வைத்திருக்கும் சில சீனியர்கள் மெல்ல மெல்ல சசிகலா தரப்புக்கு இணக்கமான சூழ்நிலையை காட்டியும் வருகிறார்களாம்.
ஆதாயத்துக்கு காத்திருக்கும் பாஜக
இப்போதைக்கு ஈபிஎஸ் அணியில் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் சரிபாதியை கரைப்பது என்பதுதான் சசிகலா தரப்பின் பிரதான அஜெண்டாவாம். சசிகலா தரப்பு நடத்தி வரும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டில் நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என தேவுடு காத்து கொண்டிருக்கிறதாம் டெல்லி பாஜக.