பாஜக அணிக்கு மறுக்கும் எடப்பாடி- அன்று சசிகலாவுக்கு ஏற்பட்ட நிலையா? பீதியில் வலது, இடது மாஜிக்கள்!
சென்னை: பாஜகவுடனான கூட்டணிக்கு குட்பை சொல்லிவிட்டு காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் பங்காளி கட்சிகளுக்கு பந்தி விரிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தயாராகி வருவதுதான் தமிழகத்தின் இப்போதைய ஹாட் டாபிக். ஆனால் மத்தியில் ஆளும் பாஜகவை வரிந்து கட்டி எதிர்த்தால் எதிர்விளைவுகளை எடப்பாடியால் சமாளிக்க் முடியுமா? என்கிற கேள்வியும் எழுகிறது.
அதிமுக தலைமையில் மெகா கூட்டணி; அதிமுக தனித்தே போட்டியிடும் என்பதெல்லாம் அதிமுக எடப்பாடி கோஷ்டி 2-ம் கட்ட தலைவர்களின் பேச்சு. அப்படி எல்லாம் 2-ம் கட்ட தலைவர்களின் பேச்சு என கடந்து செல்ல முடியாது என ஆணித்தரமாக பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்துக்கு அமித்ஷா வரும்போது எல்லாம் அவசியம் சந்திக்கனுமா? என்கிற கேள்வியில் தொடங்கி தினகரனை கூட்டணியில் சேர்க்க 1% கூட வாய்ப்பில்லை என்பது வரை எடப்பாடி பழனிசாமி கொட்டி வரும் வார்த்தைகள் பாஜகவை ரத்தம் கொதிக்க வைத்திருக்கிறதாம். அதிமுக என்ற ஆலமரம் இருந்தால்தானே அப்படி இப்படி என சில ஆதாயங்களையாவது பெற முடியும் என்கிற கணக்கில் மண்விழும் போது பாஜக பதைபதைப்பது இயல்பானதுதான்.

எடப்பாடியை வளைக்கும் வழக்குகள்
இந்த அரசியல் களேபரங்களுக்கு நடுவே. தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதில் முறைகேடு நடைபெற்ற புகாரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு முகாந்திரம் இருக்கிறது என்கிறது சென்னை உயர்நீதிமன்றம். ஏற்கனவே கொடநாடு கொலை கொள்ளை வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானதாக இருக்கிறது. அதிமுகவுக்கு உரிமை கோரி தொடரப்பட்டிருக்கும் வழக்கும் நிலுவையில் இருக்கிறது. இவை அனைத்துமே எடப்பாடி பழனிசாமியின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற தலைக்கு மேலே தொங்குகிற கத்திகள்.

பாஜகவுக்கு எதிராக எடப்பாடி தீவிரம்
ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பாஜகவை மறைமுகமாக கை கழுவ வேண்டும் என்பதில் குறியாகவே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது இந்த போக்கு அதிமுகவில் ஆதரவை அதிகரித்தாலும் அவருக்கு மிக நெருக்கமான குறிப்பாக வழக்குகளில் சிக்கி இருக்கும் சில மாஜி அமைச்சர்களின் வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருக்கிறதாம். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலாவுக்கு நேர்ந்தது நமக்கு வர எவ்வளவு நேரமாகும் என்கிற பீதிதானாம் அது.

சசிகலாவுக்கு எதிரான டெல்லி
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் முதல்வராக்கப்பட்டார். ஓபிஎஸ் முதல்வரான பின்னர், மத்தியில் பாஜக, தமிழகத்தில் எதிர்க்கட்சியான திமுக ஆகியவற்றுடன் இணக்கம் காட்டி வந்தார். இதனை சசிகலா குடும்பம் ரசிக்கவில்லை. இதனால் ஓபிஎஸ்-ன் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அத்துடன் சசிகலா, முதல்வராக முடிவெடுத்து பதவி ஏற்பு விழாவுக்கும் ஏற்பாடுகளை செய்துவிட்டார். சசிகலாவின் இந்த வேகத்தை அன்று டெல்லி ரசிக்கவில்லை. சசிகலா, முதல்வர் நாற்காலி கனவில் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் இலவு காத்த கிளியாக காத்திருந்த போதுதான் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கான சிறை தண்டனை உறுதியானது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசியல் எதிர்கால திட்டங்களும் தவிடுபொடியாகி மண்ணோடு மண்ணாகிப் போனது. இந்த கோபத்தைதான் ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்து வெளிப்படுத்தினார் சசிகலா.

பீதியில் மாஜி அமைச்சர்கள்
இப்போது ஏறத்தாழ சசிகலா நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என அஞ்சுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். பாஜகவை பகிரங்கமாக எடப்பாடி எதிர்த்துவிட்டால் நிலைமை அத்தனையும் தலைகீழாகிவிடும்.. சசிகலா நிலைமை வந்துதான் தீரும் என்பது வலதும் இடதுமாக இருக்கிற மாஜிக்களின் கவலை. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஏதோ ஒரு தைரியத்தில் நடப்பது நடக்கட்டும் என வேகம் காட்டுகிறார்... ஆக மொத்தத்தில் பெரும் பிரளயம் ஒன்று காத்திருக்கிறது என்றே ஆரூடம் சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications