"நான் தான் முதலமைச்சர் வேட்பாளர்.. அதிமுக தலைமையில் தான் கூட்டணி".. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும் நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் 8 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்றும், நமது கூட்டணி தான் மெகா கூட்டணியாக இருக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். முதல்கட்டமாக வருகிற 7 ஆதேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தனது பிரசார பயணத்தை தொடங்கும் இபிஎஸ், 23ஆம் தேதி தஞ்சை பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின் மூலம் அவர் 33 சட்டசபை தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் ரோடு ஷோ நடக்கிறது. அதில் மக்களோடு மக்களாக எடப்பாடி பழனிசாமி நடந்து செல்கிறார். அதேபோல் கட்சி நிர்வாகிகள் வீட்டில் உணவருந்தும் வகையில் அவரது பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சில இடங்களில் கட்சியினர் வீட்டிலேயே இரவு தங்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இசட் பிளஸ் பிரிவில் 12 கமாண்டோ படை வீரர்கள், 52 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம் தொடர்பான லோகோ மற்றும் பாடல் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை கழக அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப் பயணத்திற்கான பாடலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "சென்னைக்கு மத்திய உள்துறை அமித் ஷா வந்த போது, இந்தியாவில் இருக்கிற அத்தனை ஊடக நண்பர்களும் வந்திருந்தனர். அப்போது, கூட்டணி குறித்து அமித்ஷா தெளிவாக அறிவித்தார். "அதிமுக- பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கும். அதிமுக ஆட்சி அமையும். முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ்" என தெளிவாக சொன்னார் அமித்ஷா.
இது அனைத்து ஊடகங்களிலும் பதிவானது. இவ்வளவு தெளிவாக சொன்ன பிறகும் ஒவ்வொரு முறையும் யார் முதல்வர் வேட்பாளர் என்கிற கேள்வியையே திரும்பத் திரும்ப கேட்கிறீர்களே.. சரியா? பாஜகவை பொறுத்தவரை டெல்லி எடுக்கும் முடிவு தான். அமித்ஷா அப்படி கூறிய பின்னர், யார் இதற்கு மாறாக பேசினாலும் அது சரியல்ல என்பதுதான் என்னுடைய கருத்து." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. நான்தான் முதலமைச்சர் வேட்பாளர். ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். எங்களுடன் கூட்டணியில் உள்ளவர்களை தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்துக்கு அழைத்துள்ளோம்." என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications